அமெரிக்க அதிபருக்கே "நிதி" கட்! பைடனுக்கு "செக்" வைக்கும் தொழிலதிபர்கள்.. திடீரென வந்த புதிய தலைவலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், பைடன் மீது இப்போது அவரது சொந்த கட்சியினரே நம்பிக்கை இழக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையே பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் நன்கொடையை நிறுத்த போவதாக தொழிலதிபர்கள் செக் வைக்க தொடங்கியுள்ளனர். இது பைடனுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் பைடன் மற்றும் டிரம்ப் இடையே தான் போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இமேஜ் காலி: ஆனால், கடந்த வாரம் டிரம்ப் உடன் நடந்த விவாதம் பைடன் மீதான இமேஜை முற்றிலுமாக காலி செய்துவிட்டது. அந்த விவாதத்தில் பைடன் திக்கி திணறி நிற்க டிரம்ப் எகிறி அடித்தார். கடந்த 4 ஆண்டுகளில் பைடன் நிர்வாகம் பொருளாதாரத்தை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட பைடன் தவறினார். இதனால் அந்த விவாதத்தில் டிரம்ப் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்.
இந்த விவாதத்திற்கு பிறகு பலரும் பைடன் உடல்நிலை குறித்து கேள்விகளை எழுப்பினர். மாற்று கட்சியினர் என்று இல்லை.. சொந்த ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே கூட பைடனுக்கு எதிராக திரும்பினர். இதற்கிடையே இப்போது அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலக வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜனநாயக கட்சிக்கு நிதி கொடுக்க மாட்டோம் என்று தொழிலதிபர்கள் செக் வைக்கவும் தொடங்கியுள்ளனர்.
நிதியுதவி இல்லை: அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு பிரச்சாரம் செய்ய மிக அதிகமாக நிதி தேவைப்படும். இதனால் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நிதி திரட்டியே பிரச்சாரம் செய்வார்கள். இதில் டிரம்ப் போன்ற ஒரு சில தொழிலதிபர்கள் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் தங்கள் சொந்த பணத்தையே பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், மற்ற வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய நன்கொடை முக்கியம். அதுபோல தான் பைடனும் பெரும்பாலும் நன்கொடையையே நம்பி இருக்கிறார்.
ஆனால் டிரம்ப் உடனான விவாதத்திற்கு பிறகு பலரும் ஜனநாயக கட்சிக்கு நன்கொடை அளிக்க மறுக்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள பிரபல தொழிலதிபரான டிஸ்னி குடும்பத்தின் வாரிசாக இருக்கும் அபிகாயில் டிஸ்னி ஜனநாயக கட்சிக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த உள்ளதாக தடாலடியாக அறிவித்துள்ளார். அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலகாவிட்டால்.. நிதியுதவியை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். அபிகாயில் டிஸ்னி பிரச்சாரத்திற்கு இதுவரை அதிகளவில் நன்கொடை கொடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர்கள் செக்: இந்தச் சூழலில் அவ்ர திடீரென இப்படி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி ஜனநாயக கட்சிக்கு பெரியளவில் நன்கொடை அளிக்கும் கார்லா ஜுர்வெட்சன், கிடியோன் ஸ்டீன் என பலரும் ஜனநாயக கட்சிக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்த விரும்புவதாக கூறியுள்ளனர். ஒருவேளை இவர்கள் நன்கொடையை திடீரென நிறுத்தினால் அது ஜனநாயக கட்சிக்கு மிக பெரிய பின்னடைவாகவே இருக்கும்.
அமெரிக்காவுக்கு பைடன் ஆற்றிய சேவை மறுக்க முடியாது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், இப்போது பைடன் உடல்நிலை மோசமாக இருப்பதை விவாதத்தில் பார்க்க முடிவதாகவும் பைடன் இதே உடல்நிலையுடன் போட்டியிட்டால் வெல்ல முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவருக்கு பதிலாக கமலா ஹாரீஸ் போட்டியிட வேண்டும் என்று அபிகாயில் டிஸ்னி வலியுறுத்தியுள்ளார்.
அடம் பிடிக்கும் பைடன்: அதேநேரம் இவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பைடன், அதிபர் ரேஸில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார். இந்தாண்டு நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எப்போது: அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 19-22 வரையிலான தேதிகளில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடக்கும்.. அப்போது தான் பைடன் அதிகாரப்பூர்வமாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதற்குள் எப்படியாவது அவரை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஜனநாயக கட்சியை ஆதரிக்கும் பல தொழிலதிபர்கள் இறங்கியுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications