"பிரச்சனையை பேசி தீர்க்கலாம்!" இந்தியா பற்றி கேட்டதும் சட்டென யூடர்ன் போட்ட டிரம்ப் அரசு! ட்விஸ்ட்
வாஷிங்டன்: டிரம்ப் வரி காரணமாக இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வர்த்தகமும் மோசமாகச் சிக்கலைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவும் இந்தியாவும் விரைவில் தங்கள் வர்த்தகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று அமெரிக்க டிரஸ்சரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகின் இரு பெரு நாடுகளும் தங்கள் பிரச்சனையைப் பேசி தீர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை விதித்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படித் தான் அவர் இப்போது இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ளார். டிரம்ப்பின் இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போகும் ஏற்றுமதி 40% வரை குறையும் என அஞ்சப்படுகிறது.

டோனை மாற்றிய அமெரிக்கா
அதேநேரம் மறுபுறம் ரஷ்யா, சீனா நாடுகளுடன் இந்தியா தனது உறவை மீண்டும் புதுப்பித்து இருக்கிறது. உலக அரசியலில் நடக்கும் இந்த மாற்றத்தை அமெரிக்கா உற்றுக் கவனித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவை இத்தனை காலம் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்கா, இப்போது தனது டோனை மாற்றி இருக்கிறது.
அமெரிக்காவும் இந்தியாவும் விரைவில் தங்கள் வர்த்தகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நம்புவதாக அமெரிக்க டிரஸ்சரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்த இரு பெரிய நாடுகளும் இந்தச் சிக்கலைப் பேசி தீர்க்கும்.. அதேநேரம் இந்தியா இன்னும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவின் இந்தச் செயலே உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிக்கிறது" என்றார்.
சீன டிராகன் & இந்திய யானை
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அது தொடர்பான கேள்விக்கு, "இது வழக்கமாக நடக்கும் சந்திப்பு தான். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் சந்தித்துள்ளனர். இது வழக்கமாக நடக்கும் ஒரு மீட்டிங் தான். இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை.. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. எனவே, எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் உறவு ரஷ்யா, சீனாவை விட நெருக்கமானவை" என்றார்.
வரிக்கு உண்மையில் என்ன காரணம்
இப்போது இந்தியாவுக்கு டிரம்ப் தரப்பு 50% வரிகளை விதித்துள்ளன. ஆசிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி இதுவாகும். ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவது மட்டுமே இந்தியாவுக்கு வரி விதிக்கக் காரணம் இல்லை என்பதை டிரம்ப் தரப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா- அமெரிக்க இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததும் கூட வரிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்த இரு பெரிய நாடுகளும் இறுதியில் பிரச்சனையைத் தீர்க்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ரஷ்ய எண்ணெய்யை வாங்கி, அதை மறுவிற்பனை செய்து, உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியுதவி அளிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய உக்ரைன் போர்
ரஷ்ய உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர், "அலாஸ்காவில் புதின்- டிரம்ப் சந்திப்பு நடந்தது. அதன் பிறகு தாக்குதல் குறையும்.. போர் மெல்ல முடிவுக்கு வரும் என்றே பலரும் நினைத்தோம். ஆனால், புதின் அதற்கு நேர்மாறாக செயல்பட்டு இருக்கிறார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு குண்டுவீச்சு தாக்குதல்களை அவர் அதிகரித்துள்ளார். டிரம்ப்பிற்கு இப்போது அனைத்து ஆப்ஷன்களும் உள்ளன. போரைத் தடுக்க அவர் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார்" என்றார்.












Click it and Unblock the Notifications