அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.. இந்தியாவுக்கு வேக்சின் கொள்முதல் செய்ய தீவிரம்
வாஷிங்டன்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கொரோனா தடுப்பூசி கொள்முதல் அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
மே 24 முதல் 28ம் தேதிவரை அவர் அங்கு சுற்றுப் பயணம் செய்கிறார். ஜெய்சங்கர் மே 26 வரை நியூயார்க்கில் இருப்பார். நியூயார்க்கில், அவர் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"வாஷிங்டன் டி.சி.யில், வெளிவிவகார அமைச்சர், ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் சந்தித்து பேச உள்ளார். இருதரப்பு உறவைக் கையாளும் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போது இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை
தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதிலும் உற்பத்தி செய்வதிலும் மத்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுடனும், நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு தடுப்பூசிகளை தரக்கோர உள்ள ஜெய்சங்கர், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்த பிரச்சினையையும் முன்வைப்பார். வங்கதேசம், மற்றும் நேபாளத்திற்கு இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. ஆனால் இப்போது அவை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய ஏற்றுமதி நிறுத்தம்
மேலை நாடுகள் தடுப்பூசிகளை கையிருப்பு வைத்திருப்பது சரியில்லை என்று ஐ.நா. ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில், இந்தியா இப்போது கையிறுப்பு வைக்க தொடங்கியுள்ளதால், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸே, ஜெய்சங்கர் சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என்கிறார்கள்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கருத்து
"கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை வெறும் 10 நாடுகள் மட்டும் வைத்துள்ளன. 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒரு டோஸ் கூட கிடைக்கவில்லை. தடுப்பூசி சமபங்கு மனித உரிமைகள் தொடர்பானது. தடுப்பூசி தேசியவாதம் அதை மறுக்கிறது. தடுப்பூசிகள் உலகளாவிய பொது நன்மையாக இருக்க வேண்டும்," என்று அன்டோனியோ குடெரெஸே கூறினார்.

அமெரிக்க அதிபர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஐந்து நாட்களுக்கு முன்பு அளித்த அறிக்கையில், அமெரிக்கா 20 மில்லியன் டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட்-தடுப்பூசிகளை ஜூன் மாத இறுதிக்குள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் எந்த நாட்டிற்கு எவ்வளவு அனுப்ப உள்ளோம் என்று தெரிவிக்கவில்லை.

தடுப்பூசி உற்பத்தியாளர்
இந்த நிலையில்தான், வாஷிங்டன் போகும் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு நிறைய டோஸ் தடுப்பூசிகளை கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுக்க உள்ளார் என்கிறது வெளியுறவுத்துறை வட்டாரம். வெளியுறவுத்துறை அமைச்சர் தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்திக்கக்கூடும் என்று தகவல்கள் வந்தாலும், அத்தகைய சந்திப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications