"அந்த 8 நாட்கள்.." அமெரிக்க அரசியல் மொத்தமாக மாறிடுச்சே! டிரம்ப் கொலை முயற்சி முதல் பைடன் விலகல் வரை
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் அரசியல் சூழல் மொத்தமாக மாறிவிட்டது. கடந்த சனிக்கிழமை டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் அமெரிக்க அரசியலை மொத்தமாக மாற்றி இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
கடந்த வாரம் சனிக்கிழமை வரை அமெரிக்காவில் இருந்த சூழலே வேறு. ஆனால் கடந்த எட்டு நாட்களாக நடந்த விஷயங்கள் தான் அமெரிக்க அரசியலை மொத்தமாக மாற்றி போட்டு இருக்கிறது.

டிரம்ப் படுகொலை முயற்சி, குடியரசு கட்சியின் தேசிய மாநாடு, பைடனின் விலகல் என்று அடுத்தடுத்து அமெரிக்க அரசியலை அதிர வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. டிரம்ப் கொலை முயற்சிக்கு அடுத்த 8 நாட்களில் நடந்த விஷயங்கள் தான் இப்போது அமெரிக்க அரசியலை மாற்றி போட்டு இருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஜூலை 13 சனிக்கிழமை: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. மேடைக்கு அருகே கூரையில் இருந்த டிரம்ப் நோக்கி 20 வயது இளைஞன் துப்பாக்கியால் சுட்டார்.

குடியேற்ற விவகாரத்தில் கமலா ஹாரிஸ் நிலைப்பாடு என்ன தெரியுமா? இந்தியர்களுக்கு இது முக்கியமாச்சே
இருப்பினும், சரியான நேரத்தில் டிரம்ப் தனது தலையை திருப்பவே, அந்த துப்பாக்கி குண்டு டிரம்ப் தலையை தவிர்த்துவிட்டு காதில் மட்டும் உரசி சென்றது. இதனால் அவர் சேலான காயத்துடன் உயிர் தப்பினர். அதன் பிறகு மேடையில் இருந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவரை காப்பாற்றினர். ரத்தம் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட டிரம்பின் போட்டோ இப்போது வரை அமெரிக்காவை ஆட்டிபடைத்து வருகிறது.
ஜூலை 15, திங்கள்கிழமை: குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்குகிறது.. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. துப்பாக்கி சூட்டிற்கு பிறகு டிரம்ப் பங்கேற்ற முதல் நிகழ்வு இதுதான். காதில் பேன்டேஜ் உடன் டிரம்ப் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது தான் ஓஹியோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவித்தார்.
ஜூலை 17, புதன்கிழமை: பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது. கடந்த ஜூன் 27ம் தேதி டிரம்ப் உடனான விவாதம் மிக மோசமாக இருந்த நிலையில், பைடன் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர். ஜனநாயக கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பைடனுக்கு எதிராக திரும்பினர். அன்றைய தினம் தான் பைடனுக்கு கொரோனாவும் உறுதியானது.
ஜூலை 18, வியாழக்கிழமை: ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களான ஒபாமா, பெலோசி உள்ளிட்டோர் கூட பைடன் போட்டியிடக் கூடாது என்றார்கள். அப்போது வரை பைடனுக்கு ஆதரவாகவே இருந்த ஒபாமா கூட எதிராக திரும்பினார். இதை அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், பைடன் போட்டியிடுவது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கூறியதாக தகவல்கள் வெளியானது.
இதே வியாழக்கிழமை தான் டிரம்ப் குடியரசு தலைவரின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் நிச்சயம் நம்பவே முடியாத மிக பெரிய வெற்றி கிடைக்க போவதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஜூலை 19, வெள்ளிக்கிழமை: பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற வலியுறுத்தும் ஜனநாயக கட்சி தலைவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்தது. மேலும், பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சில ரிப்போர்ட்கள் வெளியானது. இருப்பினும், பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 20, சனிக்கிழமை: குடியரசு கட்சியின் வேட்பாளபாளராக அறிவிக்கப்பட்ட உடன் முதல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டார். மிச்சிகனில் பேசிய டிரம்ப், தான் ஜனநாயகத்தை காக்க துப்பாக்கி குண்டை வாங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்கள் வேட்பாளர் யார் என்றே தெரியாத சூழலியே ஜனநாயக கட்சியினர் இருப்பதாகவும் அவர் சாடினார்.
ஜூலை 21, ஞாயிறு: ஜனநாயக கட்சிக்குள்ளேயே அழுத்தம் அதிகரித்த நிலையில், அமெரிக்க நேரப்படி ஞாயிறு மதியம் 1.45 மணியளவில் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். மேலும், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 8 நாட்களில் கடந்த மாற்றமே இப்போது அமெரிக்க அரசியலை மொத்தமாக மாற்றி போட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications