சாட்போட் குறித்த சர்ச்சை பேச்சு. . ஊழியரை பணிநீக்கம் செய்ததா கூகுள்?. . என்ன நடந்தது
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு சாட்போட் 'லாம்டா'- வை தன்னையறிந்த நபர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய மூத்த ஊழியரை, பணியில் இருந்து நீக்கியதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள், பல்வேறு செயலிகள் மூலம் தனது பயனர்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்போட் லாம்டாவையும் அறிமுகப்படுத்தி இணைய உலகத்தை வியக்க வைத்தது.
கூகுள் தனி சாம்ராஜ்ஜியம்
நமக்கு ஏதாவது சந்தேகம் எழுந்தால் வயதில் மூத்தவரையோ, அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் அனுபவம் மிக்க நபர்களையோ நாடுவது எல்லாம் ஏறத்தாழ அருகிவிட்டது என்றே சொல்லலாம். தற்போதைய ஸ்மார்ட் உலகில், இந்த அனைத்திற்கும் கூகுள் ஒன்றே போதும் என்ற நிலை வந்துவிட்டது. ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை அனைத்திற்கும் வழி சொல்வது மட்டும் இன்றி நமக்கு எதைப்பற்றிய சந்தேகம் எழுந்தாலும் உடனடியாக கூகுளை நாடி தீர்த்துக்கொள்கிறோம். அந்த அளவுக்கு மனிதனின் அன்றாட வாழ்வில் கூகுள் பரிட்சயம் ஆகிவிட்டது.
லாம்பட் தொழில்நுப்டம்
பல்வேறு இணைய தேடு பொறி நிறுவனங்கள் இருந்தாலும், கூகுளே இன்றளவும் கொடி கட்டி பறக்கிறது. அதற்கு காரணம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஐஎன்சி அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு பயன்ர்களுக்கு விருந்தளிப்பது என்றே சொல்லலாம். அந்த வகையில் தான் கடந்த 2017-ம் ஆண்டு லாம்டா (LamDA) எனும் தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது. சாட்பாட் (ChatBot) எனப்படும் மனிதர்களைப் போன்று உரையாடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட இது, மனிதர்களுடன் உரையாடும் என்று கூறி அறிமுகம் செய்தது.
ஊழியர் நீக்கம்
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு மனிதனைப் போன்றே உணர்வுகள் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் மூத்த ஊழியரான பிளேக் லெமோயின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்த கூகுள் நிறுவனம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு சாட்போட் LaMDA தன்னை அறிந்த நபர் ( self-aware person) என்று கூறிய பிளேக் லெமோயினை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
கூகுள் விளக்கம்
பிளேக் லெமோயின், நிறுவனத்தின் கொள்கைகளை மீறியுள்ளதாக கடந்த மாதம் அவருக்கு கட்டாய விடுப்பு அளித்த கூகுள், பிளேக் லெமோயினின் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரம் அற்றவை. இது குறித்த நீண்ட விவாதத்துக்கு பிறகும் தொடர்ந்து பாதுகாப்பு கொள்கைகளை பிளேக் லெமோயின் மீறுவது வருத்தமளிக்கிறது எனக்கூறியதோடு, அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மனிதனின் மொழிகளை புரிந்து அதற்கேற்றவாறு பதிலளிக்கக்கூடிய அல்காரிதம் தான் இது எனவும் கூகுள் தெரிவித்து இருந்தது.