"H-1B விசா திட்டமே ஒரு பிராடு தான்.." சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் அரசு! குறிவைக்கப்படும் இந்தியர்கள்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹெச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தினார். ஹெச்-1பி விசா திட்டம் மூலம் இந்தியர்களே அதிகம் பலன் பெற்ற நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. ஹெச்-1பி விசா கட்டண உயர்வு தொடர்பாகப் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில், இது குறித்து டிரம்ப் நிர்வாகம் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்ய ஹெச்-1பி விசா மிக முக்கியமான ஒரு திட்டமாக இருந்தது. உலகெங்கிலும் இருந்து வல்லுநர்கள் ஹெச்-1பி மூலமாகவே அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்றனர். இருப்பினும், இந்த ஹெச்-1பி திட்டத்தை டிரம்ப் அரசு தொடர்ந்து எதிர்த்தே வந்தது. இந்தச் சூழலில் தான் சில வாரங்களுக்கு முன்பு விசா கட்டணத்தையும் டிரம்ப் உயர்த்துவதாக அறிவித்தார்.

கடும் எதிர்ப்பு
இது பல்வேறு தரப்பினருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனால் டிரம்ப் முடிவுக்கு அமெரிக்காவிலேயே கூட கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக டிரம்ப் அரசு முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளது.
இத்தனை காலம் ஹெச்-1பி சிஸ்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அமெரிக்கர்களின் ஊதியம் பெருமளவு குறைய இதுவே காரணமாக இருந்ததாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்த நிலையை மாற்றி அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, ஹெச்-1பி விசா மோசடிகளைத் தடுக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் லீவிட் தெரிவித்தார்.
டிரம்ப் விளக்கம்
ஹெச்-1பி விசாவுக்கு எதிரான வழக்குகள் குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த வழக்குகளை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, எங்கள் விசா அமைப்பை வலுப்படுத்துவதே அதிபரின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. ஹெச்-1பி விசா அமைப்பு நீண்ட காலமாக மோசடிகளால் நிரம்பியுள்ளது.. இது அமெரிக்கர்களுக்கு வரும் ஊதியத்தைக் குறைத்துள்ளது.
எனவே, இதில் இருக்கும் தவறுகளைச் சரி செய்ய அதிபர் விரும்புகிறார். இதனால் தான் அவர் புதிய கொள்கைகளை அமல்படுத்தினார். இந்த நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நிச்சயம் நாங்கள் வென்று காட்டுவோம்" என்றார்
பின்னணி
முன்பு ஹெச்-1பி விசாவுக்கு 2000 டாலர் மட்டுமே கட்டணமாக இருந்தது. இருப்பினும், அதை ஒரு லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தினார். இதை எதிர்த்து அமெரிக்க வர்த்தகச் சம்மேளனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், லீவிட் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தகச் சம்மேளனம் மட்டுமின்றி, தொழிற்சங்கங்கள், சில ஊழியர்களும் கூட இந்தக் கட்டண உயர்வு அமெரிக்கத் தொழிற்துறையை நாசமாக்கும் எனச் சொல்லி கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் ஃபெடரல் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
டிரம்ப்பின் ஹெச்-1பி கட்டண உயர்வு அமெரிக்கத் தொழில்துறைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இது குடியேற்றம் & தேசிய சட்டத்திற்கு எதிரானது எனச் சொல்லி வர்த்தகச் சம்மேளனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசு செலவுகள் அடிப்படையிலேயே விசா கட்டணம் இருக்க வேண்டும் என விதி இருக்கும் சூழலில் அதை மீறும் வகையில் விசா கட்டண உயர்வு இருப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிவைக்கப்படும் இந்தியர்கள்?
இது குறித்து அமெரிக்க வர்த்தகச் சம்மேளனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் நீல் பிராட்லி கூறுகையில், "ஒரு லட்சம் டாலர் என்ற விசா கட்டணம் அமெரிக்க நிறுவனங்களைப் பாதிக்கும்.. குறிப்பாக ஸ்டார்ட்-அப்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஹெச்-1பி திட்டத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். சர்வதேச அளவில் தலைசிறந்த ஊழியர்களை அமெரிக்கா அழைத்து வருவதே ஹெச்-1பி திட்டத்தின் நோக்கம்.. ஆனால், அதைத் தடுக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வு இருக்கிறது" என்றார்.
ஹெச்-1பி விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பலனடைந்து வந்தனர். அதற்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவை பயன்படுத்துவதைக் குறைக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications