அதிபர் பதவியிலிருந்து "நீக்கப்படுகிறாரா" டிரம்ப்? ஒவ்வொரு நாளும் ஆபத்துதான்.. சபாநாயகர் எச்சரிக்கை!
வாஷிங்டன்: டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்கவில்லையெனில் விசாரணையை சந்திக்க நேரிடும் என அமைச்சரவைக்கு சபாநாயகர் பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் வெற்றியை முறையாக அங்கீகரிக்க அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளும் கூடியிருந்த நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
உலகமே இதனால் ஷாக் அடைந்தது. இந்த நிலையில்தான், சபாநாயகரான கலிபோர்னியாவை சேர்ந்த நான்சி பெலோசி மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த செனட்டர் சக் ஷூமெர் ஆகியோர், அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25வது திருத்தத்தினை அமல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்சிடம் கூறினர்.
ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்கா
அமெரிக்காவுக்கு ஆபத்து
ஒருவேளை இந்த நடவடிக்கையை எடுக்க துணை அதிபர் பென்ஸ் மறுத்து விட்டால், ஜனநாயக கட்சியினர் 2வது முறையாக டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர் என அமைச்சரவைக்கு பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், டிரம்ப் நீதி விசாரணைக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். சபாநாயகர் பெலோசி இதுபற்றி கூறுகையில், டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து செல்வதற்கு 13 நாட்களே மீதம் உள்ளன. ஆனாலும், டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஒவ்வொரு நாளும் பெரும் ஆபத்து நிறைந்த நாளாகும். நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை செயல்கள், டிரம்பின் தேசதுரோக செயல் என்று பெலோசி கூறியுள்ளார்.
இம்பீச்மென்ட்
டொனால்ட் ட்ரம்பை அகற்றுவதற்கான தீர்மானத்திற்கு செனட்டில் வெற்றிபெற குறிப்பிடத்தக்க ஆதரவு தேவை. அது எப்படி என பார்க்கலாம்?
அமெரிக்க அதிபராக இருப்பவரை அவரது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு "இம்பீச்மெண்ட்" பயன்படுத்தப்படுகிறது. தேசத்துரோகம், லஞ்சம் மற்றும் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விசாரணை குழு
இதையடுத்து பிரதிநிதிகள் சபையின் சார்பில் ஒரு நீதி விசாரணை குழு அமைக்கப்படும். இந்த நீதி விசாரணைக் குழு விசாரணை நடத்தும் போது குற்றச்சாட்டு மீது உரிய அளவுக்கு ஆதாரங்கள் இருந்தால் பின்னர் அது ஓட்டெடுப்புக்கு விடப்படும். பெரும்பான்மையை விடவும் குறைவான ஓட்டுகள் கிடைத்தால் இந்த நடவடிக்கை கைவிடப்படும். பெரும்பான்மை ஓட்டுக்கள், அதிபருக்கு எதிராக கிடைத்தால் செனட் சபை அதிபருக்கு எதிராக விசாரணையை நடத்தும்.
செனட் உறுப்பினர்கள்
மூன்றில் இரண்டு பங்கு செனட் உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக ஓட்டு போட்டால், அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். துணை அதிபர் அதிபராக பொறுப்பேற்றார். ஒருவேளை மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக ஓட்டு போட்டால், அதிபர் பதவியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.