சிங்கப்பெண்! "20 நிமிஷம்.." மின்னல் தாக்கியதால் நின்று போன இதயம்.. போராடி மீண்டு வரும் இந்திய மாணவி
வாஷிங்டன்: அமெரிக்காவில் மின்னல் தாக்கியால் உயிருக்குப் போராடிய 25 வயது இந்திய மாணவி, இப்போது மெல்லக் குணமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல நூறு மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக மேற்படிப்பிற்கு அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.
அப்படி அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காகச் சென்ற 25 வயது இந்திய மாணவி ஒருவர் அங்கே எதிர்பாராத விதமாக மோசமான விபத்தில் சிக்கினார். இருப்பினும், அதில் இருந்தும் கூட அவர் துணிச்சலாகப் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

மாணவி: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் படிக்கும் இந்திய மாணவி சுஸ்ரூன்யா கொடுரு. 25 வயதான அவர், அமெரிக்காவில் தங்கிப் படித்து வருகிறார். கடந்த ஜூலை 2ஆம் தேதி அவர் சான் ஜசிண்டோ பூங்காவில் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் மிக மோசமாகக் காயமடைந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலில் வென்டிலேட்டர் உதவியுடன் தான் அவருக்குச் சிகிச்சை தரப்பட்டது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்த நிலையில், துளியும் விட்டுக் கொடுக்காமல் போராடியுள்ளார் இந்த சிங்கப் பெண். இதன் விளைவாக அவரது உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு உள்ளது.
வென்டிலேட்டர்: இதற்கிடையே அவர் கடந்த வாரம் முதல் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் தானாகச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளார், வென்டிலேட்டரில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்னல் நேரடியாகத் தாக்கியதால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இத்தனை குறுகிய காலத்தில் எப்படி தானாக சுவாசிக்கத் தொடங்கினார் என்பது அங்குள்ள மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லையாம்.
அவர் வென்டிலேட்டர் இல்லாமல் நன்றாகச் சுவாசித்து வருவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதே நிலை தொடர்ந்தால் நிரந்தரமாக வென்டிலேட்டரை நீக்கிவிடலாம் எனத் தெரிவித்தனர். இந்த பெண் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராம். இவரது பெற்றோர் இப்போது ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் ஹூஸ்டனுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.
அமெரிக்கச் செல்லும் பெற்றோர்: அமெரிக்காவுக்கு விசா கிடைக்க எந்தளவுக்குத் தாமதமாகும் என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இருப்பினும், மகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பெற்றோருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த வாரம் தங்கள் மகளைப் பார்க்க அமெரிக்கா செல்லவுள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு மூச்சுக்குமாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இப்போது வென்டிலேட்டர் இல்லாமல் அவரால் சுவாசிக்க முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தரப்பில் இருந்து பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து அந்த மாணவியின் உறவினர் சுரேந்திர குமார் கூறுகையில், "மின்னல் தாக்கியதால் அவர் அருகிலிருந்த குளத்தில் தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்கள் அப்படியே இருந்த நிலையில், அதன் பிறகே அவரது ரத்த ஓட்டம் தடைப்பட்டது. இதனால் அவரது மூளையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் கோமா நிலைக்கும் தள்ளப்பட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
இப்போது அவரால் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியும் நிலையில், அடுத்து அவரது மூளை செயல்பாடு மீண்டும் திரும்ப வேண்டும். இதனால் அவரது மூளை செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 12 லட்சத்தில் ஒரு முறை மின்னல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 43 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications