டிரம்ப் குடைச்சல்.. இந்திய வரி விகிதங்கள், கெடுபிடிகள் இனி எப்படி மாறப்போகிறது தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், உலக வர்த்தகத்திற்கும், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கும் பல்வேறு பொருளாதார மாற்றங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் பொதுவாக அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்களை மேற்கொள்வதே இதற்கு காரணம்.
இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த விரும்பினால், தற்போதைய உயர்ந்த இறக்குமதி வரிகளை மறுபரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் மோட்டார் உதிரிப்பாகங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் உள்ளிட்ட மூலதனப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சராசரி இறக்குமதி வரி 7.5% ஆக உள்ளது. இதே நேரத்தில், சீனாவில் இது 1.7%, வியட்நாமில் 2.3% மட்டுமே.

இவ்வாறு அதிக வரிகளை விதிப்பது, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய வர்த்தக கூட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, தொழில்துறையின் செலவுகளை அதிகரிக்கும். டிரம்ப், இத்தகைய வரிகளை விரும்பமாட்டார் என்பதும், இந்தியாவுக்கு அதில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு
இந்தியா, சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உள்நாட்டு ஒழுங்குமுறைகளை செயல்படுத்தியுள்ளது. உலோகம், எரிசக்தி, காகித தொழில், மற்றும் மின் சாதனங்கள் போன்ற துறைகளில் "இறக்குமதி மேலாண்மை" என்ற பெயரில் புதிய வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையான தடைகள் அமெரிக்க தொழில்துறையினருக்கு இடையூறாக மாறி வருவதால், டிரம்ப் இதைப் பற்றி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, இந்தியாவில் சில தொழில்துறைகளில் உள்ள இறக்குமதி வரம்புகள் (Quota Restrictions) காரணமாக, நுகர்வோர் மின்சாதனங்கள் மற்றும் மோட்டார் உதிரிப்பாகங்கள் போன்ற தயாரிப்புகளின் வெளியீடு தாமதமாகிறது.
சீனாவுக்கு மாற்று இருக்க முடியுமா?
டிரம்ப், சீனாவிலிருந்து வரும் உலோகம், மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதிக்கலாம். ஆனால், உலகளவில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் சில உதிரிப்பாகங்களை சீனாவிலிருந்து பெறுவதால், முழுமையாக சீனாவை தவிர்க்க முடியாது. எலான் மஸ்க் (Elon Musk) போன்ற தொழில்துறை ஜாம்பவான்களின், முதலீடுகளும் சீனாவில் தொடரும் என்பதால், இந்த நிலைமை வர்த்தக உலகில் புதிய பரிமாணங்களை உருவாக்கும்.
இந்தியா மாற்றம் செய்ய வேண்டுமா?
தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்பக் கருவிகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் முறைமையில், இந்தியாவின் விதிகள் தற்போது வெளிநாட்டு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளை அங்கீகரிக்காது. இதன் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் கூட இந்தியாவின் தனிப்பட்ட சோதனை முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன.
மேலும், பல்வேறு தொழில்துறைகளில் "Quality Control Orders" (QCOs) என்ற பெயரில் தரநிலைகள் விதிக்கப்படும் போது, சர்வதேச தரத்திலிருந்து தனித்துவமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால், அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான சிக்கல்கள் உருவாகின்றன. எனவே இந்த கெடுபிடியையும் இந்தியா தளர்த்தும் எனத் தெரிகிறது.
இந்தியா மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மாற்றங்கள்
மூலதனப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது.
இறக்குமதி வரம்புகளை (Quota Restrictions) நீக்குவது.
உயர் தொழில்நுட்பப் பொருட்களுக்கு தேவையான பாதுகாப்பு சோதனைகளை, சர்வதேச ஆய்வகங்களின் சான்றிதழ்களையும் அங்கீகரிக்கும் வகையில் மாற்றுவது.
தர நிர்ணய முறைகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க வடிவமைப்பது.
தன்னியக்க சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்புகளை விரைவாக செயல்படுத்துவது.
பிடிவாதக்காரரான டிரம்ப் காரணமாக, இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மாற்றம் அடைய வேண்டிய நெருக்கடியான நிலை உருவாகலாம். இந்திய அரசு, பழைய போக்கை தொடராமல், வர்த்தக தடைகளை தளர்த்தி, சமயோஜித பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டால், அமெரிக்காவுடன் உறுதியான வர்த்தகத் தொடர்பு கொண்டிருப்பதற்கு வழி வகுக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications