யுரேனியம் செறிவூட்டல் விவகாரம்..அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடனுக்கு ஈரான் திடீர் நெருக்கடி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுக்கு முதல் நெருக்கடியாக ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் தலையெடுத்திருக்கிறது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் கடும் போக்கை கடைபிடித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் கை கோர்த்து செயல்பட்டதால் ஈரானுடன் யுத்தம் உருவாகும் சூழ்நிலை உருவானது.

அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவ புதிய அதிபராக ஜோ பிடன் (ஜோ பைடன்) பதவியேற்க இருக்கிறார்.

யுரேனிய செறிவூட்டல்
டொனால்ட் டிரம்ப் போல இல்லாமல் ஜோ பிடன், ஈரானுடன் சமரச அணுகுமுறையை கையாள வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2015-ம் ஆண்டு அனைத்துலக நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை 20% அளவுக்கு செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கிவிட்டது.

அணு ஆயுத தயாரிப்பு முன்னோட்டம்
யுரேனியம் செறிவூட்டல் பணியை ஈரான் அதிகரிக்க அதிகரிக்க அணு ஆயுத தயாரிப்பு காலம் நெருங்கிவருகிறது அல்லது குறைகிறது என்பதால் சர்வதேச நாடுகள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன. ஈரானின் இந்த புதிய நடவடிக்கையை எதிர்கொள்ளப் போவதுதான் ஜோ பிடனின் முன்பு உள்ள பெரிய சவாலாக உள்ளது.

ஜோ பிடன் என்ன செய்வார்?
டொனால்ட் டிரம்ப் பாணியில் கடும் போக்கை ஜோ பிடன் தொடருவாரா? அல்லது தம்முடைய ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக ஈரானுடன் ஜோ பிடன் கை குலுக்கப் போகிறாரா என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications