ரூ.130 கோடி சொத்து இருக்கு.. ஆனாலும் டாக்ஸி ஓட்டும் கோடீஸ்வரர்! காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் அங்கு ஊபரில் புக் செய்து பயணித்துள்ளார். அங்கு ஊபரில் அவருக்கு வந்த கார் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர் சொன்ன தகவல்கள் இவரை மிரள வைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 130 கோடி சொத்து வைத்துள்ள அந்த நபர், ஜாலியாக ஊபர் ஓட்டிக் கொண்டு இருக்கிறார். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை நிறுவிய நபர், அமெரிக்காவில் ஊபர் காரில் பயணித்த போது சந்தித்த டிரைவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆனது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

அமெரிக்காவில் இந்தியர்
வினீத் என்ற அந்த நபர் டீல்ஸ் தமாக்காவின் நிறுவனர் ஆவார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற அவர் ஊபரில் கார் புக் செய்துள்ளார். அப்போது அவருக்கு வந்த காரை ஓட்டியவர் ஓய்வுபெற்ற மூத்த நிர்வாகியாம். அவரது நிகர மதிப்பு மட்டும் 15 மில்லியன் டாலர் . அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.130 கோடியாகும். இவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கும் அவர், எதற்காக ஊபர் ஓட்டுகிறார் என்ற சந்தேகம் வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
காரணம் என்ன
ஊபர் ஓட்டும் அந்த நபர் மத்திய கிழக்கு நாட்டில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்த நிர்வாகியாம். மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகள் பயணித்த அவர், கணிசமான செல்வத்தை சேர்த்துவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். என்ன தான் இவ்வளவு பெரிய சொத்து இருந்தாலும் சும்மா இருந்தால் போர் அடிக்கும் என்பதால் அவர் சலிப்பைத் தவிர்க்கத் தொடர்ந்து வேலை செய்து வருகிறாராம்.
ரூ.130 கோடி சொத்து
வினீத் மேலும் தனது ட்விட்டர் பதிவில், "எனது ஊபர் டிரைவருக்கு அமெரிக்காவில் $1.5 மில்லியன் மதிப்புள்ள 2 வீடுகளும், பல்கேரியாவில் 3.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கூடுதல் ரியல் எஸ்டேட்டும் இருக்கிறது. அவரது மூன்று குழந்தைகளும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள் ஒருவர் லண்டனில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.. மற்ற இருவரும் ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக கால்பந்து விளையாடி வருகிறார்கள்..
அவரது மனைவி அமெரிக்காவில் வேலை செய்து வருவதால் இவர் உடன் தங்கி இருக்கிறார். அவர்களின் நிகர சொத்து மதிப்பு 15 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.130 கோடி) உள்ள சூழலில், அவர்கள் இன்னும் வேலை செய்து வருகிறார்கள். போர் அடிக்கக்கூடாது என்பதற்காகவே அவர் ஊபர் ஓட்டுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்..
நெட்டிசன்கள்
வினீத்தின் இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு பதில்களை அளித்து வருகிறார்கள். இவ்வளவு தூரம் நிகர மதிப்பு இருக்கும் போது, பெரும்பாலான மக்கள் கார் ஓட்ட தயங்குவார்கள். ஆனால், இவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கார் ஓட்டுவதாகப் பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர், உண்மையிலேயே அவரது கதை வியக்க வைக்கிறது. இவ்வளவு பெரிய சொத்து வைத்திருந்தாலும் அவர் துளியும் தயக்கம் இல்லாமல் ஊபர் ஓட்டுகிறார்" என்றார். அதேபோல மற்றொரு நபர், "அவர் வருமானத்திற்காக ஊபர் ஓட்டவில்லை.. பொழுதை போக்கவே ஊபர் ஓட்டுகிறார்" என பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் தங்களுக்கு இதுபோல நடந்த வினோதமான டாக்ஸி கதைகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications