ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் வெடித்த போராட்டம்! குவிந்த மக்கள்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் மோதலில் நேற்றைய தினம் அமெரிக்கா தலையிட்டது. ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவிலேயே மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மீதான போர் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்று சொல்லி நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த ஒரு வாரமாகவே இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நீடித்து வந்தது. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாகவும் அதைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ஈரான் கூறியது. அதேநேரம் அணு ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே வந்தது.

உள்ளே வந்த அமெரிக்கா
இந்தச் சூழலில் அமெரிக்கா திடீரென நேற்றைய தினம் இந்த மோதலில் உள்ளே வந்தது. ஈரான் நாட்டில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. அதேநேரம் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து பல நகரங்களில் போர் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. "ஈரான் மீது கை வைக்காதே", "ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் கூடாது" போன்ற பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கண்ணை மூடிக்கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ஆடிப்போன டிரம்ப்
அமெரிக்காவின் பாஸ்டன், சிகாகோ, நியூயார்க் என பல இடங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்கா இந்த மோதலில் ஈடுபடக்கூடாது என்றும் காசாவில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஈரானுடன் இஸ்ரேல் தேவையில்லாமல் மோதலை ஆரம்பித்திருப்பதாகவும் சாடி போராட்டம் நடத்தினர்.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உட்பட முக்கிய அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதுவரை எந்தவொரு அச்சுறுத்தல்களும் இல்லை என்றாலும் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மோசமான சேதம் ஏற்பட்டதாக அமெரிக்கா தரப்பு கூறுகிறது. அதேநேரம் ஈரான் இந்த தாக்குதலால் தங்கள் செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றே கூறி வருகிறது.
மேலும், அமெரிக்காவின் தாக்குதலை ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கடுமையாகக் கண்டித்தார். மேலும், ஈரான் மீதான தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் சாடியுள்ளார். இஸ்ரேல்- அமெரிக்கா பெரிய தவறு செய்துள்ளது என்றும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரங்களில் நடந்த போர் எதிர்ப்பு போராட்டங்கள், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவாலாக உள்ளது.












Click it and Unblock the Notifications