1337-ஆண்டுக்கு பிறகு அரிய நிகழ்வு..பூமியை நெருங்கும் நிலவு..ஆனாலும் பார்க்க முடியாது..ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: 1337 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய நிகழ்வு இன்று நடக்கிறது. அதாவது பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு இன்று வருகிறது. இதற்கு முன்பாக கடந்த 992 ஆம் ஆண்டில்தான் நிலவு இப்படி பூமியை நெருங்கி வந்ததாம். பூமியை நெருங்கி வந்தாலும் இந்த நிகழ்வை நம்மால் காண முடியாது. அது ஏன் என்ற விவரங்களை கீழே காணலாம்.
பிரபஞ்சம் எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் உள்ளடக்கியது.
ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் எண்ணற்ற கோள்கள் உள்ளன. பல்வேறு பேரதிசயங்களை கொண்டஇந்த பிரபஞ்சம் தொடர்பான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. விலகிய பாமக.. பின்னணியில் 5 ‛மேஜர்’ விஷயம்.. கணிப்பு சரிதான்!
சூரியக்குடும்பம்
நாம் வாழும் இந்த பூமியும் சூரியக்குடும்பத்தில் ஒரு அங்கமே என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சூரிய குடும்பத்தில் கோளாக இருக்கும் பூமியின் துணைக்கோளாக நிலவு உள்ளது. பூமி எப்படி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறதோ அதேபோல நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருகிறது. நிலவு பூமியை முழுமையாக சுற்றி வர எடுக்கும் காலம் சுமார் 29 நாட்கள் ஆகும்.
புது நிலவு
இந்தக் கால கட்டத்தில் நம் கண்ணுக்கு முற்றிலும் தெரியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு வட்டமாக தெரியும் நிலைக்கு நிலவு வரும். பின்னர் சிறிது சிறிதாக தேய்ந்து முற்றிலும் தெரியாத நிலைக்கு செல்லும். இதை அமாவாசை, மறைமதி என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் இதையே நியூ மூன் (புது நிலவு) என்று சொல்வர். சூரியனும் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புது நிலவு ஆகும்.
1337 ஆண்டுகளுக்குப் பிறகு
நிலவின் புற பக்கத்தில் சூரிய ஒளி முழுமையாக பதிகிறது. இதனால், புவியை நோக்கி இருக்கும் நிலவின் முன்பக்கம் ஒளியின்றி இருக்கும். இதனால், அந்த நாளில் நமது கண்ணுக்கு நிலவும் புலப்படாது. இந்த நிலையில், 1337 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய நிகழ்வு இன்று நடக்கிறது. அதாவது பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு இன்று வருகிறது. இதற்கு முன்பாக கடந்த 992 ஆம் ஆண்டில்தான் நிலவு இப்படி பூமியை நெருங்கி வந்ததாம்.
அமாவாசை தினத்தில் நடப்பதால்
தற்போது இப்போதுதான் பூமிக்கு இவ்வளவு நெருக்கமாக நிலவு வருகிறது. 356,570 கி.மீட்டர் தொலைவுக்கும் கீழே நிலவு பூமியை நெருங்கி வர உள்ளது. சனிக்கிழமை (இன்று) இந்த அரிய நிகழ்வு நடைபெற்றாலும் அமாவாசை தினத்தில் இந்த அரிய நிகழ்வு நடப்பதால் பூமியின் துணைக்கோளான இந்த நிலவை நம்மால் இன்று காண முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அரிய நிகழ்வு நடக்கப்போவது இல்லை
நடப்பு வாரத்தில் வானில் நடக்கும் இந்த அரிய நிகழ்வை வானியற்பியல் மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கிரஹாம் ஜோன்ஸ் என்பவர் கணித்து வெளியிட்டுள்ளார். போர்ப்ஸ் இதழில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த 345 ஆண்டுகளுக்கு இப்படி ஒரு அரிய நிகழ்வு நடக்கப்போவது இல்லை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று நடைபெறும் புது நிலவுக்கு மறுநாள் வெள்ளி மற்றும் சனி ஆகிய கோள்கள் நெருங்கி வருகின்றன. இதை சில டெலஸ்கோப் மற்றும் பெரும்பாலான பைனோகுலர்கள் மூலமாக பார்க்க முடியும்.