அதிர்ந்த அமெரிக்கா.. தமிழர் மீது கொலைவெறித் தாக்குதல்! தலையில் ஸ்க்ரூ டிரைவரால் குத்திய மர்ம நபர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த தமிழர் மீது மர்ம நபர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அலி அக்பர். 61 வயதாகும் இவர் அந்நாட்டில் நியூயார்க் நகரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இரவு பணி முடித்து ரயிலில் அவர் தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அலி அக்பர் அருகே கருப்பு சட்டை, முகக்கவசம் அணிந்தபடி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஏதோ புலம்பிக்கொண்டே இருந்ததை அலி அக்பரும் சக பயணிகளும் கவனித்து உள்ளனர்.

இந்த நிலையில் அந்த மர்ம திடீரென அலி அக்பர் முகத்தில் பல முறை ஓங்கி குத்தினார். இதனால் அலி அக்பர் நிலைகுலைந்து படுகாயமடைந்தார். சுதாரிப்பதற்குள்ளாகவே தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஸ்க்ரூ டிரைவரை எடுத்து அலி அக்பருடைய தலையில் பல முறை குத்தினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலி அக்பர் விழுந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர், சுரங்கப்பாதையில் கீழே குதித்து தப்பிச்சென்றுவிட்டார்.
படுகாயம் அடைந்த அலி அக்பரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் கட்டுப்போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் ரயில் சுரங்கப்பாதையில் நிற்கும்போது நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அலி அக்பர் மனதளவில் அச்சத்தில் இருப்பதாக அவருடன் ரயிலில் வந்த அவரது உறவினர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட அலி அக்பரின் உறவினர் ஷேக் அக்பர் அந்நாட்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "அந்த ரயில் பெட்டியில் ஏதோ பிரச்சனை நடப்பது தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் அவரை மூன்று முறை முகத்தில் குத்தினார்." என்றார். இது தொடர்பாக தாக்கப்பட்ட அலி அக்பர் கூறுகையில், "மூன்று, நான்கு முறை தலையில் ஸ்க்ரூ டிரைவரால் குத்தினார். ஆனால், காயம் ஆழமாக ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயங்கள் இல்லை என்றாலும் அச்சமாக உள்ளது. நாளை என்ன நடக்கும் என்று அச்சமாக உள்ளது. பிரம்மை பிடித்ததுபோல் உள்ளது." என்றார்

தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொலம்பஸ் சர்கிள் 59வது தெரு வழியாக தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ டிரைவரை போலீசார் கைப்பற்றி உள்ளார்கள். அமெரிக்காவில் அலி அக்பர் இவ்வாறு தாக்கப்படுவது 2 வது முறையாகும். கடந்த ஜூலை மாதமும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் அவரது பல் உடைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.













Click it and Unblock the Notifications