திடீரென உயிரிழக்கும் சிம்பன்சிகள்.. கொடிய பாக்டீரியா மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு.. அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள சிம்பன்சிகளைத் தாக்கும் கொடிய பாக்டீரியா, மனிதர்களையும் தாக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மனிதர்களின் டிஎன்ஏவுடன் ஒட்டியிருக்கும் ஒரு விலங்கு என்றால் அது சிம்பன்சிகள் தான். மனிதர்களுடன் டிஎன்ஏவுடன் இந்த சிம்பன்சி குரங்குகளின் டிஎன்ஏ சுமார் 98% வரை ஒத்துப் போகிறது.
இதன் காரணமாகவே பெரும்பாலும் முக்கிய ஆராய்ச்சிகள் அனைத்தும் சிம்பன்சிகள் மீது முதலில் மேற்கொள்ளப்படும். பல்வேறு விஷயங்களிலும் சிம்பன்சிகள் உடல் செயல்படும் அதேபோல மனிதர்களின் உடலும் செயல்படும்.
புதிய நோய்
இந்நிலையில், ஆப்ரிக்காவின் சியரா லியோன் நாட்டிலுள்ள டகுகாமா சரணாலயத்தில் சிம்பானசிகளுக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இ.என்.ஜி.எஸ். எனப்படும் epizootic neurologic and gastroenteric syndrome என்று சிம்பன்சிகளைத் தாக்கும் ஒரு வகை பாக்டீரியாவைக் கண்டறிந்தனர்.
உயிரிழப்பு
2005ஆம் ஆண்டு முதல் இந்த பாக்டீரியா தாக்குதல் காரணமாக இதுவரை 56க்கும் மேற்பட்ட சிம்பன்சிகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் உயிரிழப்பது சர்சினா என்ற தொற்றுநோய் காரணமாக என்பதைக் கண்டறிந்தனர். சிம்பன்சிகளின் வயிற்றைத் தாக்கும் இந்த அரிய வகை தொற்று, குரங்கின் வயிற்றுச் சுவர்களைச் சேதப்படுத்தும். மேலும், குரங்கின் வயிற்றில் வாயுவையும் ஏற்படுத்தும்.
மனிதர்களை தாக்கும் அபாயம்
சியரா லியோன் பூங்காவில் உயிரிழந்த சிம்பன்சிகளின் வயிறுகளும் பெருத்து இருந்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்கும் கிட்டதட்ட ஒரே டிஎன்ஏ இருப்பதால் இந்த பாக்டீரியா மனிதர்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து விரிவாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். .
நோய் தீவிரம்
சிம்பன்சிகள் குரங்ககுகள் அதிகபட்சம் உயிரிழப்பது இந்த வகை பாக்டீரியா காரணமாகத்தான். இந்த வகை பாக்டீரியாக்கள் 33.7 சதவிகித சிம்பான்ஸிகளை பாதிக்கின்றன, மேலும் 63.6 சதவிகித இறப்புகளுக்குக் காரணமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான சிம்பன்சிகள் உயிரிழந்துவிடுகிறது. இந்த பாக்டீரியா மார்ச் மாதம் வேகமாகப் பரவுகிறது. இருப்பினும், இவை நேரடியாக ஒரு சிம்பன்சியிடம் இருந்து மற்ற சிம்பன்சிகளுக்குப் பரவுவது இல்லை.