ட்ரோன்கள் இனி காலி! ஒரே கட்.. உலகம் முழுக்க இண்டர்நெட் இருக்காது! அமெரிக்கா, சீனாவின் புது ஆயுதங்கள்
வாஷிங்டன்: உலக ராணுவத் துறையில் ஒரு திருப்புமுனையாக, நவீன போரின் போக்கை மாற்றக்கூடிய மூன்று புதிய அதிநவீன ஆயுதங்கள் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் உலக நாடுகளின் பாதுகாப்பு உத்திகளையும், போர் முறைகளையும் மறுவரையறை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானில் மின்னல் பாய்ச்சும் லியோனிடாஸ்
அமெரிக்காவின் எபிரஸ் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள "லியோனிடாஸ்" எனும் உயர் சக்தி மைக்ரோவேவ் (HPM) அமைப்பு, வான்வழி இலக்குகளை துல்லியமாகத் தாக்கி செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. அளவில் சிறியதாகவும், எளிதில் கையாளக்கூடியதாகவும் உள்ள இந்த அமைப்பு, வினாடிக்கு ஆயிரக்கணக்கான மின்காந்த அலைகளை உருவாக்கும் வல்லமை பெற்றது. இதன் மூலம் ரஷ்யாவின் ஓர்லான்-10, லான்செட், சீனாவின் விங் லூங், ஈரானின் ஷஹேட்-136 போன்ற பல்வேறு வகையான ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் முடக்க முடியும். கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள லியோனிடாஸ், இலக்குகளின் மின்னணு அமைப்புகளை அழித்துவிடும். பரந்து விரிந்த கதிர்வீச்சு திறனால், ஒரே சமயத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் இதற்கு உண்டு.

கடலுக்கு அடியில் அமைதியாக ஊடுருவும் கருவி
சீனாவின் கப்பல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஆழ்கடல் மனிதவழி வாகனங்களின் மாநில ஆய்வகம் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கருவி, கடலுக்கு அடியில் 4,000 மீட்டர் ஆழத்தில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் மின் கேபிள்களை துண்டிக்கும் திறன் படைத்தது. வைரத்தால் பூசப்பட்ட இதன் வெட்டும் சக்கரம் மற்றும் அமைதியான மோட்டார், எஃகு பூசப்பட்ட கேபிள்களையும் எளிதில் வெட்டி வீசி விடும். சீனா இதனை மேம்பாட்டுப் பணிகளுக்காக உருவாக்கியுள்ளதாகக் கூறினாலும், நிபுணர்கள் இதன் ராணுவ பயன்பாடு குறித்து கவலை தெரிவிக்கின்றனர். போர்ச் சூழலில் எதிரிகளின் தகவல் தொடர்புகளை முடக்க இது பயன்படுத்தப்படலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

வானில் இருந்து பாயும்
வட கொரியா, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தற்கொலைப்படை வான்வழி வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொக்கெட் பூஸ்டர் மூலம் ஏவப்படும் இந்த வாகனம், தானாகவே இலக்குகளை அடையாளம் கண்டு தாக்கும் திறன் கொண்டது. சர்வதேச தடைகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவின் உதவியுடன் வட கொரியா தனது ராணுவத் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், வட கொரியா சமீபத்தில் ஒரு விமானத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும். இந்த புதிய ஆயுதங்களின் அறிமுகம், நவீன போரில் நாடுகளின் மேலாதிக்கத்திற்கான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்களுக்கான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலக நாடுகளின் சக்தி சமநிலை மற்றும் போர் யுக்திகளில் இனி வரும் காலங்களில் கணிசமான மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ எண்ணிக்கை மட்டுமே இனி போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்பதுதான் இதிலிருந்து படிக்க வேண்டிய பாடம்.












Click it and Unblock the Notifications