70,000 ஆண்டுக்கு முன் நடந்த மரபணு மாற்றம்! கண்டறிந்த ஸ்வான்டே பாபோவுக்கு.. மருத்துவத்திற்கான நோபல்
வாஷிங்டன்: இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதக் குலத்திற்கு மாபெரும் சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் என மொத்தம் ஏழு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு யார் யாருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்க பரிந்துரை
நோபல் பரிசு
இந்த ஆண்டிற்கான முதல் நோபல் பரசு அறிவிப்பு மருத்துவத் துறைக்கான அறிவிப்பாக வெளியாகி உள்ளது. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் ஆவர்.
எதற்காக
இன்றை நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினரான கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தற்காலத்து மனிதர்கள் தோன்றும் முன்னர், பண்டைக் காலத்தில் மனிதர்களைப் போலப் பல இனக் குழுக்கள் இருந்தன. இதை ஹோமினின் என்று அழைப்பார்கள். அப்படி டெனிசோவா என்ற அறியப்படாத ஹோமினினையும் இவர் கண்டுபிடித்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
70 ஆயிரம் ஆண்டுகள்
ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பில், "சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த போது, இந்த ஹோமினின் குழுவில் இருந்து ஹோமோ சேபியன்களுக்கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது ஸ்வான்டே பாபோ கண்டுபிடித்து உள்ளார். இந்த பண்டைய மரபணுக்கள் இன்றும் கூட நமக்குத் தொடர்பு இருக்கிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு
நமது உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு எப்படி இயங்குகிறது.. தொற்றுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதெல்லாம் அந்த மரபணு மாற்றத்துடன் தொடர்புடையது. இந்த துறையில் ஸ்வான்டோவின் ஆய்வு புதிய அறிவியல் ஆய்வுகளுக்கு வழி வகை செய்து உள்ளது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஸ்வான்டே பாபோ இப்போது பரிணாம மானுடவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
நோபல் பரிசு
நோபல் பரிசு 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ஃபிரட் நோபலின் ஆசையின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் வெல்பவர்களுக்குத் தங்கப் பதக்கமும் 1.14 மில்லியன் டாலர் பணமும் வழங்கப்படும். இந்த வாரத்தில் வரும் நாட்களில் மற்ற ஆறு துறைகளுக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.