"என்னாச்சு கிம் ஜாங் உன்" தலைக்கு பின்னாடி ஏன் இப்படி இருக்கு.. உன்னிப்பாக பார்க்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி மீண்டும் உலக நாடுகள் முழுக்க பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான அவரது புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பேண்டேஜ்.
தனது சர்வாதிகார உத்தரவுகளால் உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்க வைத்தவர் கிம் ஜாங் உன். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது உடல் நிலை மோசமாகிக் கொண்டே இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அவரது, தந்தை, தாத்தா உள்ளிட்டோர் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் மரபணு காரணமாக, கிம் ஜாங் உன் அதுபோன்ற பாதிப்புக்குள்ளாகி இருக்கக்கூடும், அதன் காரணமாகதான், உடல் எடை அதிகரித்து உள்ளது, நடக்கும் போது மிகவும் மூச்சு வாங்குகிறது என்பது குறித்தெல்லாம் வரிசையாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
கிம் ஜாங் கை கடிகாரத்தை கவனிச்சீங்களா.. பரபர வட கொரியா.. உன்னிப்பாக நோட் செய்யும் உளவு அமைப்புகள்!
யூகங்கள் கிளம்பின
திடீரென பொது நிகழ்ச்சிகளில் எதுவும் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாமல் இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் ஒரு வழியாக அவர் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் வந்த அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அவர் உடல்நிலை சரியில்லாமல் மெலிந்தாரா அல்லது உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் மெலிந்தாரா என்பது பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பின. வழக்கம்போல வடகொரியா தரப்பு வாய்திறக்கவில்லை. அது ஒரு இரும்புத்திரை நாடாக இன்னமும் இருப்பது தான் இது போன்ற சந்தேகங்கள் கிளம்ப காரணமாக மாறிவிடுகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் அதிபர் கவலைப்படுவதாக இல்லை. எந்த ஒரு தகவலும் வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்வதில் தான் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
தலைக்கு பின்னால் பேண்டேஜ்
ஜூலை 24 முதல் 27 ஆம் தேதி வரை கொரிய மக்கள் ஆர்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றுள்ளார். இது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது தலையின் பின் பக்கத்தில் பேண்டேஜ் ஒட்டியிருக்கிறார் . இந்த காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.
என்ன காரணம்
அடி பட்டால் அந்த இடத்தில் பேண்டேஜ் ஒட்டுவார்கள், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கூட ஒட்டப்படுவது வழக்கம். எனவே கிம் ஜாங் உன் எந்த மாதிரி உடல்நிலை பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பதை பற்றி உலக நாடுகள் கவலைப்பட ஆரம்பித்துள்ளன.
கீறல் பட்டாலும் துடிக்கும் உலகம்
அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளார் கிம் ஜாங் உன். எனவே அவரது உடல் நிலைக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆயுதங்களின் கட்டுப்பாடுகள் யார் கைகளுக்கு போகும் என்ற கவலை அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது. இதுதான் அவரது உடலில் ஒரு சின்ன கீறல் பட்டால் கூட உலகமே துடித்து போவதற்கு காரணம்.
கடந்த போட்டோ
ஜூலை 11ம் தேதி இசைக்கலைஞர் ஒருவருடன் கிம் ஜாங் உன் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியானது. அதில் அவரது தலைக்கு பின்னால் காயம் எதுவும் இல்லை. ஆனால் இப்போது வெளியான புகைப்படத்தில் தான் தலைக்கு பின்னால் பேண்டேஜ் இருப்பதால், பல சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் பாவம்
கடந்த ஜூன் மாதம் கிம் ஜாங் உன் புகைப்படம் மிகவும் மெலிந்த தோற்றத்தோடு வெளியானபோது வடகொரியா மக்கள் அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுது விட்டனர் என்று அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. இப்போது பேண்டேஜ் போட்டு வந்துள்ள கிங் ஜாங் உன் புகைப்படத்தை பார்த்த பிறகு மக்கள் எப்படி துடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
உஷாரான உளவு அமைப்புகள்
இதனிடையே வடகொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவின் உளவுத்துறை அமைப்புகள் கிம் ஜாங் உன் 10 முதல் 20 கிலோ வரை எடை குறைந்திருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக, அரசுக்கு தெரியப் படுத்தியுள்ளன. அதேநேரம் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உடல் மெலியவில்லை. மருந்துகள் எடுத்துக் கொண்டு உடல் மெலிந்து இருக்கலாமென்று உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இரு காரணங்கள்
இதற்கு இரு காரணங்களை முன்வைக்கின்றனர் . அதில் ஒன்று.. கிம் ஜாங் உன் நீண்ட நேரம் ஆலோசனைக் கூட்டங்களில் அமர்ந்து ஆலோசனைகளை நடத்தியுள்ளார். ஓய்வு எடுக்கவில்லை என்பது. இன்னொன்று.. அவரது நடையில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. முன்பு போலவே அவரது நடை இருக்கிறது என்பதை உலக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பல வருடங்களாக இப்படித்தான்
இன்று நேற்று கிடையாது, 2014ஆம் ஆண்டில் கூட கிம் ஜாங் உன் 16 வாரங்கள் பொதுவெளிக்கு வரவே இல்லை. அதன் பிறகு ஒரு கம்பை ஊன்றி கொண்டு நடந்து வெளியே வந்தார். அவர் வாத நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. 2015 நவம்பர் மாதம் கிம் ஜாங் உன் இடது மணிக்கட்டில் ஒரு கட்டு காணப்பட்டது. 2019 ஜூன் மாதமும் அவரது விரலில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டாலும் அவருக்கு என்னதான் நடக்கிறது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக, உலகில் யாருக்கும் தெரியவில்லை.