வெள்ளை மாளிகை அருகே சட்டென சரிந்த விமானம்.. ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்க முயன்ற போது நடுவானில் ஹெலிகாப்டரில் மோதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே விமானங்களைப் பயன்படுத்துவோர் தான் அதிகம். விமானச் சேவை என்பது அமெரிக்காவில் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

விமானங்களில் பொதுவாகவே பாதுகாப்பு நெறிமுறைகள் உச்சத்தில் இருக்கும். அதுவும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் அங்கு விமான போக்குவரத்திற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து:
இதற்கிடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, அது ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ஆனால் ரீகன் விமான நிலைய செயல்பாடுகள் அனைத்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு தரையிறக்கம் ஆகியவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் 65 பயணிகள் வரை பயணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம் போடோமாக் நதி பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு:
இதற்கிடையே இந்த விபத்து குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பயணிகள் விமானத்தின் மீது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விமானம் போடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதுவரை போடோமேக் ஆற்றில் இருந்து 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானத்தில் 60 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சாஸில் உள்ள விச்சிட்டா என்ற இடத்தில் இருந்து வாஷிங்டனுக்கு வந்த விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர்:
விபத்தில் சிக்கிய அந்த விமானம் அமெரிக்காவின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்கன் ஏர்லனைஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இருப்பினும், அதை பிஎஸ்ஏ என்ற மற்றொரு சிறிய நிறுவனம் தான் ஆப்ரேட் செய்து வந்தது. இந்தச் சூழலில் தான் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்த சூழலில், அவர்களின் நிலை என்ன ஆனது தெரியவில்லை.
என்ன காரணம்:
இந்த விபத்திற்கு என்ன காரணம்.. யார் மீது தவறு என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், விமானத்தின் டேட்டாவை பார்க்கும் போது அதன் உயரம் சில நொடிகளில் மளமளவென சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் உள்ள வான்வெளியில் இது நடந்துள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மிக அருகில் தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications