டிரம்ப் அப்படி சொன்னாரே.. சந்திக்காமல் ரிட்டன் ஆகும் பிரதமர் மோடி.. அமெரிக்காவில் என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், டொனால்டு டிரம்ப் கூறியபடி மோடியுடனான அவரது சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. இன்று பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

கடந்த வாரத்தில் கமலா ஹாரரிஸ் - டொனால்டு டிரம்ப் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் ஸ்கோர் செய்தார். அதன்பிறகு மீண்டும் விவாதம் நடத்த கமலா ஹாரிஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால், டிரம்ப் இதனை ஏற்க மறுத்துவிட்டார். தேர்தல் பரபரப்புக்கு இடையே, டொனால்டு டிரம்ப் மீது இருமுறை கொலை முயற்சி நடைபெற்றது அதிபர் தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்காவிற்கு வரும் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். இதனால், மோடி - டிரம்ப் சந்திப்பு நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரை கவரும் முயற்சியாக மோடியுடனான சந்திப்பை டிரம்ப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள ஊடகங்களில் பலரும் கருத்துக்களை கூறியிருந்தார்கள்..
ஆனால் அமெரிக்காவிற்கு 3 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். தனது 72 மணி நேர சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு புறப்பட்டார். டிரம்ப் கூறியது போல மோடியுடனான அவரது சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்று வந்ததால் அவருக்கு அதிபர் வேட்பாளர் யாரையும் சந்திக்க நேரமும் இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி திங்கள் கிழமை இரவு இந்தியா புறப்பட்டார். முன்னதாக தனது அமெரிக்க பயணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்தார்.
முன்னதாக கடந்த வாரம் தனது பிரசாரக் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், " பிரதமர் மோடி அற்புதமானவர்" என்று கூறியதோடு அவரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் . எனினும், இந்த சந்திப்பு எங்கே நடைபெறும்? எப்போது நடைபெறும்? என்ற எந்த தகவலை டிரம்ப் கூறவில்லை. அதேவேளையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகும், டிரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பதில் எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications