"கேன்சர் பாதிப்பு, ஆண்மை குறைவு..!" மழை நீரை இனியும் குடிக்க முடியாது! பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: இந்த பூமியில் பெய்யும் மழை நீர் எதுவும் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகிலேயே மழையின் மூலம் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தான் மிகவும் தூய்மையானதாக இத்தனை காலம் இருந்தது. கிராமங்களில் மழை நீரைத்தான் பிடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள்
ஆனால், இதையும் மனிதர்களாகிய நாம் கெடுத்துவிட்டோம். இனி மழை நீர் கூட பாதுகாப்பானதாக இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மழை நீர்
மனிதர்கள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகத்தில் இந்த பூமியை மிக மோசமான மாசுபடுத்தி வைக்கிறோம். இதனால் பூமியில் வாழும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்துக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே பூமியில் பெய்யும் மழை நீரின் தூய்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மழை நீர் இனியும் நேரடியாகக் குடிக்கப் பாதுகாப்பானதாக இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

கெமிக்கல்
இப்போது பூமியில் பெய்யும் மழைநீரில் பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் எனப்படும் அபாயகரமான ரசாயனங்கள் உள்ளன. ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த ஆய்வில் வளிமண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த அபாயகரமான ரசாயனங்கள் பரவி உள்ளதைக் கண்டறிந்து உள்ளனர். பூமியின் எந்த பகுதியும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

மழை
உணவு பேக்கேஜிங், நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள், தீயை அணைக்கும் நுரைகள், எலக்ட்ரானிக்ஸ் ஷாம்புகள், அழகுசாதனப் பொருட்கள் என மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களே இந்த ரசாயனம் பரவ காரணம். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் போது, இவை காற்றில் வெளிப்படும். அவை நீரில் கலந்து கடலை சென்றடைகிறது. அங்கிருந்து வளிமண்டலத்திற்கு ஆவியாகச் சென்று மீண்டும் மழையாகப் பூமிக்கு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கேன்சர் பாதிப்பு
இவை என்றைக்கும் அழியாத ஆபத்தான ரசாயனங்கள் ஆகும். இவை மக்கிப் போகாமல் மனிதர்கள், விலங்குகளில் கூட படியும் ஆபத்தான போக்கு உள்ளது. இதற்கு முன்பு, அண்டார்டிகா ஆர்டிக் கடல் பனியிலும் கூட இந்த ஆபத்தான ரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவை ஆபத்தான புற்றுநோய், ஆண்மைக் குறைவு, நோயெதிர்ப்பு ஆற்றல் குறைப்பு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. இவை நமக்குத் தெரிந்த சில பாதிப்புகள் தான். இன்னும் நமக்குத் தெரியாமல் இந்த ஆபத்தான ரசாயனங்கள் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

பாதுகாப்பானதாக இல்லை
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை ஆய்வு செய்தனர். அனைத்து இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரிலும் இந்த ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதைக் கண்டு ஆய்வாளர்களே மிரண்டுவிட்டனர். மழையில் இருந்து கிடைக்கும் நீர் இனியும் நேரடியாகக் குடிக்கப் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கட்டுப்பாடு தேவை
இந்த ஆபத்தான பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் ரயாசனங்கள் இருப்பதால், மழை நீரை நேரடியாகக் குடிக்கும் போது நமக்கு கேன்சர் வரும் ஆபத்துகள் உள்ளன. இந்த ஆபத்தான பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் ரசாயனங்களில் அளவு சுற்றுச்சூழலில் பல மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் இதனால் இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications