உச்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்... "அமெரிக்கர்களே, நாடு திரும்புங்க" ஜோ பைடன் திடீர் அழைப்பு
வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும் என ஜோபைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. உக்ரைன் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதே பிரச்னைக்கு காரணமாகும். இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது.
அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன் பதற்றம்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் திடீர் சந்திப்பு
படைகளை குவிக்கும் ரஷ்யா
இருப்பினும் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோபைடன் வேண்டுகோள்
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் வாழ் அமெரிக்கர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது போர் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும்.
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உலகில் பலம்படைத்த ராணுவத்தை நாங்கள் கையாள்கிறோம். இந்த வித்தியாசமான சூழலில் சில விஷயங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் முன்கூட்டியே அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும். ஏனென்றால் அமெரிக்கா, ரஷ்யா இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டால் அது உலகில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' எனக்கூறினார்.
ரஷ்யாவுக்கு கண்டனம்
மேலும் ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. நில ஆக்கிரமிப்பு நோக்கத்தில் ராணுவ வீரர்களை அச்சுறுத்துவது நாடுகளின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்துள்ளன.
தேவையில்லாத பதற்றம்
ரஷ்யா ராணுவம் தரப்பில், ‛‛வீரர்கள் பயிற்சியில் தான் ஈடுபடுகிறார்கள். போர் தொடுக்கும் நோக்கம் இல்லை. பயிற்சி முடிந்து வீரர்கள் வீடு திரும்ப உள்ளனர்''என கூறினார். உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜிலென்ஸ்கி கூறுகையில், ‛‛எல்லையில் படைகளை குவிப்பது அண்டை நாட்டுக்கு தேவையில்லாத பதற்றத்தை கொடுக்கும்'' என கூறப்பட்டுள்ளது.