உக்ரைனில் பாய்சன் அட்டாக்! அதுவும் "அவர்களை" குறி வைத்து! பின்னணியில் யார்? போரில் திடீர் ட்விஸ்ட்
வாஷிங்டன்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
அதிபர் புதினின் இந்தச் செயலை கண்டித்துள்ள உலக நாடுகள், ரஷ்ய மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இருந்த போதிலும், போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

அமைதி பேச்சுவார்த்தை
போர் தொடங்கியது முதலே, ஒரு புறம் சண்டை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்துப் பேசினர். இருந்தாலும் கூட அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், உக்ரைன் போர் 5ஆவது வாரமாக இப்போதும் தொடர்கிறது. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள சிலரைக் குறி வைத்து பாய்சன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாய்சன்
பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ரஷ்யத் தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த விஷத் தாக்குதல் நடந்துள்ளது. சமாதான பேச்சுக்களைச் சீர்குலைக்க முயலும் சில ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்குப் பின்னர், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு மேற்கத்திய நாடுகளால் ரஷ்யத் தொழிலதிபர்கள் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. அப்படி அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட தொழிலதிபராக ரோமன் அப்ரமோவிச் உள்ளார்.

யார் இந்த ரோமன் அப்ரமோவிச்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் இந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் முக்கியமானவராக உள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த இரண்டு பேருக்குச் சிவந்த கண்கள், நீர் வடிதல், முகம் மற்றும் கைகளில் தோல் உரிதல் உள்ளிட்ட பாய்சன் அறிகுறிகள் தெரிந்துள்ளன. இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அமைதி பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதே இவர்களின் நோக்கம் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கூறப்பட்டுள்ளது.

வார்னிங் மட்டும்
இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அப்ரமோவிச் உள்ளிட்டோரின் உடல்நிலை மேம்பட்டுள்ளன. தற்போது அவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாய்சன் கொல்லும் தன்மை கொண்டது இல்லை என்றும் இதன் மூலம் எச்சரிக்கை விடுப்பதே அவர்களின் நோக்கம் என்று முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யார் காரணம்
இந்த் தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யாவைச் சேர்ந்த சிலர் இருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு அதிகாரி கிறிஸ்டோ குரோசெவ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நரம்பு தாக்கும் விஷத்தை ரஷ்ய உளவாளிகள் அளித்ததை முதலில் கூறியவர் கிறிஸ்டோ குரோசெவ். இவர் தான் இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ரஷ்யா இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்தத் தாக்குதல் தொடர்பான மாதிரிகளைத் தக்க நேரத்தில் சேகரிக்க முடியாததால் இது தொடர்பாக கிறிஸ்டோ குரோசெவ் உறுதியாக கருத்து கூறவில்லை.

தீவிர முயற்சி
அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யத் தொழிலதிபரும் அதிபர் புதின் உடன் நீண்ட உறவைக் கொண்டவருமான அப்ரமோவிச் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுப்பதாகத் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுப்படுத்தவும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் அனைத்து தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதேநேரம் பாய்சன் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். இந்த விஷ தாக்குதல் குறித்து ரோமன் அப்ரமோவிச் உள்ளிட்டோர் கருத்து கூற மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications