வெடிமருந்து, பஞ்சம், மாசு... அனைத்தையும் கண்டுபிடிக்கும் கீரை.. அறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சல்
வாஷிங்டன்: சுற்றியிருக்கும் வெடிபொருட்களைக் கண்டறிந்து, அது குறித்து மெயில் அனுப்பும் வகையில் கீரையை நேனோ டெக்னாலஜி ஆய்வு மூலம் மாற்றியமைத்துள்ளனர்.
அறிவியல் உலகம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஆராய்ச்சிகள் காரணமாக உலக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளன. விளக்கு, மின்விசிறி, ஏன் மின்சாரம்கூட இது போன்ற ஆராய்ச்சியாளர்களின் உழைப்பில் உருவானதுதான்.
இந்நிலையில், அறிவியல் உலகில் அடுத்தகட்ட பாய்ச்சலாகச் சுற்றியுள்ள தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து, என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியும் வகையில் கீரையை ஆராய்ச்சியாளர்கள் உருமாற்றியுள்ளனர். நேனோ டெக்னாலஜி ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்த சாதனையைச் செய்துள்ளனர்.

வெடி மருந்தை கண்டுபிடிக்கும் கீரை
நிலத்தடி நீரில் நைட்ரோஅரோமாடிக் என்ற ஒரு வகை கெமிக்கல் இருப்பதைக் கீரையின் வேர் கண்டுபிடித்தால் அது, ஒரு வகை சிக்னலை வெளியிடும். பொதுவாக வெடி மருந்துகளில்தான் இந்த நைட்ரோஅரோமாடிக் என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படும். கீரை வெளியிடும் சிக்னல், அங்கிருக்கும் இன்னபிற ரெட் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படும். அதன் பின் இது குறித்து தகவல் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்படும்.

எப்படி முடியும்
இதற்காகக் கீரையின் வேர்களில் கார்பன் நானோ குழாய்களை ஆராய்ச்சியாளர்கள் மாற்றியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் "தாவர நானோபயோனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு புதிய திறன்களை அளிக்க முடியும். மேலும், மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு பிரச்சினையும் இந்த ஆராய்ச்சிகள் மூலம் சரி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிக திறன் அளிக்க முடியும்
இது குறித்து இந்த ஆய்வை தலைமை தாங்கிய பேராசிரியர் மைக்கேல் ஸ்ட்ரானோ கூறுகையில், "பொதுவாகத் தன்னை சுற்றியுள்ள கெமிக்கல்களில் சிறு மாற்றம் இருந்தால்கூட அதைத் தாவரங்கள் எளிதில் அடையாளம் காணும். நிலத்தின் அடியிலிருந்து உறிஞ்சும் நீரை மேலே இலைகளுக்கு அனுப்பும் தாவரங்களுக்கு குறிப்பிட்ட திறன்கள் நிறைய உள்ளன. ஆராய்ச்சிகள் மூலம் பல தாவரங்களுக்கும் நம்மால் அதிக திறன்களை அளிக்க முடியும்" என்றார்.

பஞ்சத்தைக் கண்டுபிடிக்கும்
பொதுவாகவே தாவரங்களுக்கு அதிக திறன் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பஞ்சம் ஏற்படுகிறது என்றால், அது மனிதர்கள் கண்டுபிடிப்பதற்குப் பல காலம் முன்னரே அங்கிருக்கும் செடிகள் உணர்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தவிர பல்வேறு ஆய்வுகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காற்று மாசை கண்டறியலாம்
மேலும், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகரிப்பதையும் கண்டறியும் திறனைக் கீரைகள் பெறும். அதாவது இதன் மூலம் அதிக மாசை ஏற்படுத்தும் நைட்ரிக் ஆக்சைட் எளிதாகக் கீரைகளால் கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல கீரைகளை அரைத்து பொடியாக்கி, மீண்டும் பேட்டரிகளாக மாற்றும்போது, அவை தற்போதுள்ள பேட்டரிகளைவிட அதிக திறன் அளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications