'காட்டுக்கு ராஜா'ன்னா சும்மாவா.. தொட்டு பார்த்தவருக்கு 'கிலி' காட்டிய சிங்க குட்டி.. பரவும் வீடியோ!
வாஷிங்டன்: காரில் அமர்ந்திருக்கும் இரண்டு சிங்க குட்டிகளை செல்லமாக கொஞ்ச நினைத்து அதன் மீது கை வைத்த நபரை சிங்க குட்டிகள் தாக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகளை நாம் எப்படி வேண்டுமானாலும் கொஞ்சலாம். இன்னும் சொல்லப்போனால், நம்முடனே இருப்பதற்கே இந்த செல்லப்பிராணிகள் விரும்பும்.
அதுவும் நாய் இனம் மனிதனோடு மிக நெருங்கி பழகக்கூடியது. ஆதிகாலத்தில் மனிதனுடன் பழகிய முதல் விலங்கே நாய் தான் என்று சொல்கிறார்கள். இதனால், நம் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த விலங்குகளும் நம்முடன் மிகவும் நெருக்கமாக பழகுகின்றன.

சிங்கம், புலி
ஆனால், சிங்கம், புலி போன்ற வன விலங்குகளின் குணாதிசயங்கள் இப்படி இருக்காது. இந்த விலங்குகள் அதன் இயற்கையான வாழ்விடத்தில் வசிப்பதையே அதிகம் விரும்பும். இயல்பிலேயே இந்த வன விலங்குகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை கணிக்க முடியாது. இதனால், இவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க பல நாடுகளில் தடை உள்ளது. இயல்பிலேயே ஆக்ரோஷ குணாதிசயங்களை கொண்டிருக்கும் இந்த சிங்கம், புலி போன்ற விலங்குகள் சில சமயங்கள் அதை பராமரிப்பவர்களின் பேச்சைக்கூட மீறும்.

இணையத்தில் பரவும் வீடியோ
இத்தகைய வனவிலங்குகளை பொருத்தவரை குட்டிகளாக இருந்தாலும் அவற்றை நம் செல்லப்பிராணிகள் போல கொஞ்சுவது சரியானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில் இரண்டு சிங்கக் குட்டிகள் காரில் பின்பகுதியில் அமர்ந்து இருக்கின்றன. அந்த சிங்ககுட்டிகளில் ஒன்றை அருகில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு டிப் டாப்பாக நிற்கும் ஒருவர் மெதுவாக தடவி கொடுக்கிறார்.

கோபமடைந்த சிங்க குட்டி
ஆனால், சட்டென கோபம் அடைந்த சிங்க குட்டி அவரை கடிப்பது போல செல்கிறது. இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் பயத்தில் விலகுகிறார். மீண்டும் அதை பிடிக்க நினைக்கும் போது காரின் டாப் பகுதியில் ஏறி சிங்க குட்டி ஓடி விடுகிறது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளையும் பார்வையாளர்களையும் கடந்துள்ளது.

விலங்குகளிடம் விளையாடாதீர்கள்
நெட்டிசன்கள் பலரும், வன விலங்குகளிடம் இப்படி நடந்து கொள்வது முட்டாள்தனம் என்றும் ஆபத்தானது எனவும் சாடியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், புலி, சிங்கம், சிறுத்தை, சிறுத்தை புலி இவையெல்லாம் வன விலங்குகள் தான். அவற்றோடு விளையாடுவது ஆபத்தையே கொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார். எனினும், இந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications