50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து.. 'உலகின் அழுக்கு மனிதர்' என்று பெயர் எடுத்த ஈரான் நபர் காலமானார்!
வாஷிங்டன்: 50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து உலகம் முழுவதும் அறியப்பட்ட 'உலகின் அழுக்கு மனிதரான ஈரானை சேர்ந்த அமாவு ஹாஜி உயிரிழந்தார்.
ஈரானை சேர்ந்த நபர் அமாவு ஹாஜி. 94 வயதான இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார்.
குளித்தால் நோய் வந்து விடும் என்று கருதி அரை நூற்றாண்டுகளாக அமாவு ஹாஜி குளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

அன்றாடம் குளித்தால்..
நமது அன்றாட கடைமைகளில் குளிப்பதும் இன்றியமையாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உடல் சுத்தத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் வெப்ப நிலையை சீராக வைக்கவும் குளிப்பது அவசியமானதாகும். அன்றாடம் தலைக்கு நீராட வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னாலும் குளிப்பதற்கு தயக்கம் காட்டும் சிலரும் இருக்கின்றனர். இதேபோல் நீண்ட நாட்கள் குளிக்காமல் இருந்தால் உடலின் செல்கள் வழியாக பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் நோய்கள் பரவும் என்றும் கூறப்படுகிறது.

குளித்தால் நோய் வந்துவிடும் என்று...
இப்படி இருக்கையில் வாரத்திற்கு ஒன்றிரண்டு நாள் குளிக்காமல் இருந்தாலே முகம் சுழிக்கும் நாம் ஒருவர் வருட கணக்கில் குளிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஆம் உண்மைதான்.. ஈரான் நாட்டில் ஒருவர் ஒரு ஆண்டு அல்ல... இரண்டு ஆண்டு அல்ல.. அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார். குளித்தால் நோய் வந்துவிடும் என்பதாலும், உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்று கருதியும் அவர் குளிக்காமால் இருந்ததாக கூறியுள்ளார். இதனால் அவர் உலகின் அழுக்கு மனிதர் என்றும் பெயர் பெற்றுள்ளார்.

50 ஆண்டுகளாக குளிக்காமல்..
ஈரான் நாட்டில் தெற்கு மாகாண பகுதியில் உள்ள பார்சில் அருகே தேஜ்கா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த அவரது பெயர் அமாவு ஹாஜி. யாருடனும் சேராமல் தனிமையில் வசித்து வந்த அமாவு ஹாஜி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்பட்டார். இவரை வைத்து "தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி" என்ற ஆவண படமும் எடுக்கப்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் அமவு ஹாஜியை பற்றி பலருக்கும் தெரியவந்துள்ளது.

அழுக்கு மனிதர் மரணம்
இதையடுத்து அவரது கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் சேர்ந்து அமவு ஹாஜியை குளிக்க வைத்துள்ளனர். இதன் பின்னர் அவர் அந்த கிராமத்திலேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த அந்த நபர் தற்போது உயிரிழந்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications