போன வாரம் வாட்ஸ்அப்.. இப்போது இன்ஸ்டாகிராம்.. அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி.. பின்னணியில் ரஷ்யாவா?
வாஷிங்டன்: மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் முடங்கிய சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராமிலும் அதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டு உள்ளது விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒட்டுமொத்த உலகமே செயலிகளை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது. பல லட்சம் பணம் அனுப்புவது முதல் பல் பொடி வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் என மாறிவிட்டது.
இது ஒரு பக்கம் மனிதர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்த உதவினாலும் கூட, மற்றொரு புறம் இந்த செயலிகளில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட நமக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்! மீண்டும் செயல்பட தொடங்கியது! என்ன நடந்தது? மெட்டா சொல்வது என்ன
மெட்டா
மெட்டா தான் உலகில் இருக்கும் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் முக்கியமானது. மெட்டா என்ற உடன் என்ன என குழம்பி விட வேண்டாம். பேஸ்புக்கின் தாய் நிறுவனத்தின் பெயர் தான் மெட்டா. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் மவுசு அதிகரித்தாலும் கூட பேஸ்புக் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
அடுத்தடுத்து அடி
இதனால் மெட்டா நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவுக்கு வளர முடியவில்லை. மெட்டா பங்குகளின் செயல்பாடுகளும் கூட கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாக இல்லை. இதனால் முதலீட்டாளர்களும் அதிருப்தியிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மெட்டா நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அடுத்தடுத்து நிறுவனத்திற்கு அடி விழுந்து இருக்கிறது.
வாட்ஸ்அப்
கடந்த அக். 25ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. சுமார் இரண்டு மணி நேரமாக வாட்ஸ்அப் அப்படியே முடங்கியது. அந்த நேரத்தில் யாராலும் மெசேஜ் அனுப்பவும் பெறவும் முடியவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை இப்படி முற்றிலுமாக முடங்கியது. வாட்ஸ்அப் தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து சரி செய்ததால் அதன் பின்னரே வாட்ஸ்அப் படிப்படியாக வேலை செய்யத் தொடங்கியது.
இன்ஸ்டாகிராம்
இருப்பினும், வாட்ஸ்அப் செயலியில் என்ன பிரச்சினை ஏன் இப்படி நடந்தது என அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையே நேற்றைய தினம் மெட்டாவின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் முடங்கியது. பலருக்கும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக நோட்டிபிகேஷன் சென்றதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன ஆச்சு எதற்காக தங்கள் இன்ஸ்டா பக்கம் முடங்கியது எனத் தெரியாமல் குழப்பினர்.
என்ன காரணம்
அதன் பின்னர் இஸ்டாகிராம் நிறுவனம் கிரேஷ் ஆகியுள்ளதாகத் தெரிவித்து. அதைச் சரி செய்ய வல்லுநர்களின் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மெல்லச் சரியானது. இன்ஸ்டாகிராம் இப்போது சரியான போதிலும், இப்படி சில நாட்கள் இடைவெளியில் இரண்டு தளங்கள் முடங்கியது மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியதற்கான காரணத்தையும் மெட்டா வெளிப்படையாகக் கூறவில்லை.
பின்னணியில் ரஷ்யாவா?
இதனிடையே நெட்டிசன்கள் வழக்கம் போலவே பல விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர் இப்படி அடுத்தடுத்து ஹேக் ஆக ரஷ்யாவே காரணம் எனக் கூறுகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து மெட்டா செயலிகளும் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளன.. அங்குள்ள கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த சூழலில் இதற்குக் காரணம் ரஷ்யா இருப்பதாகக் கூற எவ்வித ஆதாரமும் இல்லை.
குழப்பம்
அதேநேரம் இப்படி அடுத்தடுத்து செயலிகள் முடங்குவது மெட்டா நிறுவனத்திற்கும் நல்லது இல்லை.. இது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினைகளை மெட்டா நிறுவனம் விரைவில் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நெட்டிசன்கள் முன் வைத்து வருகிறார்கள்.