“ஈரான் விஷயத்தில்.. மகிழ்ச்சியாக இல்லை!” திடீரென அப்செட்டான டிரம்ப்! விரைவில் தாக்குதல் நடக்கலாம்
வாஷிங்டன்: இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரான் விஷயத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது.
அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணுகுமுறை திருப்தியளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், ராணுவ நடவடிக்கை குறித்து, 'நான் அதை விரும்பவில்லை, ஆனால் சில நேரங்களில் அது தவிர்க்க முடியாதது' என்றார்.

'அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம்' என்ற உறுதிமொழியை ஈரான் அளிக்க மறுப்பதாக டிரம்ப் குறை கூறினார். ஆனால், தங்கள் நாட்டின் எரிசக்தி, மருத்துவம் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்ட உரிமை உண்டு என்று கூறிவரும் ஈரான் அதிகாரிகள், அணு ஆயுதங்களை தாங்கள் வைத்திருக்கப் போவதில்லை என்பதை சமீப நாட்களிலும் உட்பட பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.
'ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது... அது என் ஆட்சிக்காலத்தில் நடக்காது,' என்று டிரம்ப் உறுதியாகத் தெரிவித்தார். மேலும் அணு சக்தி விஷயத்தில் ஈரானுடன் ஒப்பந்தத்தை போட விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்று டிரம்ப் தெரிவித்தார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பில் உள்ள ஓமன் வெளியுறவு அமைச்சரை, பேச்சுவார்த்தை நடக்கும் நாளில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சந்திப்பார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், 'ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம்' என்றார். அணு ஆயுதங்களை ஈரான் பெறுவதைத் தடுப்பதே அமெரிக்கத் தாக்குதலின் நோக்கம் என்று அதிகாரிகள் கடந்த காலங்களில் கூறியுள்ளனர். அதேநேரம், ஆட்சி மாற்றம் ஒரு நல்ல முன்னேற்றம் என்றும் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications