"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈரான் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில் டிரம்ப் தனது திட்டத்தை மாற்றிவிட்டதாகத் தெரிகிறது. இத்தனை காலம் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் எனச் சொல்லி வந்த டிரம்ப், இப்போது மெல்ல அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டார். விட்டால் போதும் எப்படியாவது போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நிலைக்கு டிரம்ப் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும்- இஸ்ரேலும் இணைந்து போரை ஆரம்பித்தது. முதலே நாளே கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் போர் சீக்கிரம் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதனால் மோதல் 5வது வாரமாக தொடர்ந்தது.

டிரம்ப்
ஆனால், இந்த போர் இவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதை அமெரிக்காவே எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே அதிபர் டிரம்ப் இந்த மோதலில் இருந்து வெளியேற விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் எனப் பொதுவெளியில் டிரம்ப் சொன்னாலும் கூட விட்டால் போதும் என்ற நிலைக்கு டிரம்ப் வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றாலும் கூட ஈரான் மீதான "ஆபரேஷன் எபிக் ப்யூரி" என்ற ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரவே டிரம்ப் விரும்புவதாகத் தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த கருத்துகளைக் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
திட்டம் மாறியது
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், "ஹார்முஸை முழுமையாகத் திறப்பதற்கான எந்தவொரு முயற்சியும் சிக்கலானது.. ஒருவேளை அப்படி எதாவது ஆரம்பித்தால் ராணுவ நடவடிக்கையைச் சீக்கிரம் முடிக்க முடியாது. டிரம்ப் திட்டமிட்ட காலக்கெடுவைத் தாண்டி மோதல் நீட்டிக்கும்" என்றார். அதாவது ஹார்முஸை திறப்பது இப்போது டிரம்பின் முதல் முன்னுரிமை இல்லை என்கிறார்கள்.
அதேநேரம் மறுபுறம் அமெரிக்கா தொடர்ந்து மத்திய கிழக்கில் தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. கடந்த வார இறுதியில், யு.எஸ்.எஸ். டிரிப்போலி போர்க்கப்பலும் 2,500-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் அங்கு நிலைநிறுத்தப்பட்டனர். டிரம்ப் மேலும் 10,000 தரைப் படைகளையும் குவித்துள்ளார். இது தவிர ஈரானின் யுரேனியத்தைப் கைப்பற்றும் ஒரு சிக்கலான திட்டத்தையும் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.
பிளான் பி
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஈரானில் டிரம்ப் தனது திட்டத்தை மாற்றுகிறார். அதாவது ஹார்முஸை திறக்கும் நடவடிக்கை இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ளார். ஹார்முஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினால் போர் திட்டமிட்டபடி 6 வாரங்களில் முடியாது என டிரம்பிற்கு அவரது ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனவே, அதற்குப் பதிலாக இறுதி டார்கெட்டில் கவனம் செலுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதாவது ஈரானின் ஆயுதக் கிடங்குகளைப் பலவீனப்படுத்துவது, அணு ஆயுத திட்டங்களை காலி செய்வது ஆகிய இலக்குகளில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கல் தான்
அமெரிக்காவின் இந்த மாறிவரும் நிலைப்பாடு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பிரஸ் மீட்டிலும் உறுதியானது. ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதும் அங்குச் சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதும் இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கமில்லை என கரோலின் லீவிட் குறிப்பிட்டார். அதேநேரம் ஹார்முஸ் பிரச்சினையைச் சரி செய்யாமல் அமெரிக்கா இதுபோல விலகினால், அந்த நீரிணை மீதான ஈரான் கட்டுப்பாடு அதிகரிக்கும். இது சர்வதேச எரிசக்தி சப்ளைக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்..












Click it and Unblock the Notifications