ஜோ பைடன் உடன் விவாதம்... எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை... பல்டி அடித்த ட்ரம்ப்!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான இரண்டாவது காணொளி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அதிபர் டொனால் ட்ரம்ப் அறிவித்துள்ளார். காணொளி விவாதத்தின் மூலம் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும், பைடனை பாதுகாக்க இந்த முடிவு என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போட்டி வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் இருவரும் களத்தில் நிற்கின்றனர்.

கொரோனா
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் நிலையில் கடந்த வாரம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவருக்கு மூன்றே நாட்களில் கொரோனா தொற்று சரியானது. ''கொரோனாவுக்கு யாரும் அச்சம் அடைய வேண்டியதில்லை. தங்களது வாழ்வாதாரத்தை துவங்கலாம்'' என்று தெரிவித்து இருந்தார்.

யுஎஸ்ஏ மரபணு
மேலும், எனது உடலில் இருந்தது ட்ரம்ப் மரபணு கிடையாது, அது யுஎஸ்ஏ மரபணு என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்து பின்னர் அதை ட்ரம்ப் நீக்கினார், இதுவும் தற்போது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பைடன்
இந்த நிலையில் காணொளி காட்சி மூலம் இரண்டாவது விவாதத்தில் ஜோ பைடனுடன் இவர் கலந்து கொள்வார் என்று அதிபருக்கான விவாத ஆணையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, இந்த விவாதத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் என்னுடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. ஜோ பைடனை பாதுகாக்கவும் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்'' என்றும் ட்ரம்ப் பாக்ஸ் டிவி சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேதி
இதுகுறித்து அதிபருக்கான விவாத ஆணையம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''டவுன் ஹால் முறையில் வேறு வேறு இடங்களில் இருந்து போட்டி வேட்பாளர்கள் இருவரும் விவாதத்தில் பங்கேற்பார்கள். இந்த விவாதம் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நெறியாளர்
மியாமியில் இருந்து நெறியாளராக ஸ்டீவ் ஸ்கல்லி பங்கேற்று அதிபருக்கான இரண்டு போட்டி வேட்பாளர்களிடம் கேள்விகளை கேட்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை துணை அதிபர்களுக்கான விவாதம் முடிந்து இருக்கும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

லைவ்
எதுவாக இருந்தாலும் ட்ரம்ப் ஆரோக்கியத்தைப் பொறுத்து விவாதம் இருக்கும் என்றும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அவரை லைவ் காட்சி அறைக்கு எவ்வாறு அழைத்து வருவது போன்றவற்றை முடிவு செய்ய வேண்டும் என்று விவாத ஆணையத்தின் உறுப்பினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

கோபம்
இதற்கு முன்னதாக ட்ரம்ப், பைடன் கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றது. இதில், ட்ரம்ப்பை பேச விடாமல் பைடன் அடிக்கடி கேள்விகளால் துளைத்து எடுத்து இருந்தார். ஒரு கட்டத்தில், ''நீங்கள் வாயை மூடுங்கள்'' என்று கோபமாக பைடன் கூறி இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது விவாதத்திற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலாளர்
இத்துடன் வெள்ளை மாளிகையில் 12க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் தேர்தல் மேலாளராக இருக்கும் பில் ஸ்டீபெயின்னுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications