அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வாக்சின்... மாஸ் காட்டும் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் போடப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
இதில் மூத்த குடிமக்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ள டிரம்ப், அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் தினமும் 2 லட்சத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பைசர் தடுப்பூசிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது அந்த நாட்டு மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
சென்னையில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு.. முதலில் யாருக்கு முன்னுரிமை?.. மாநகராட்சி ஆணையர்
கொரோனா அதிவேகம்
உலக நாடுகளை பொறுத்த அளவில் அமெரிக்காவில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பலியாவோர் எண்ணிக்கையும் தினமும் சில ஆயிரத்துக்கு மேல் சென்று வருகிறது.
காத்திருப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்று பொதுமக்கள் காத்து இருந்தனர்.
அவசர அனுமதி
இந்த நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
நிபுணர்கள் ஆய்வு
முன்னதாக நிபுணர் குழுவினர் பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளை ஆய்வு செய்தனர். அந்த நிபுணர் ஆலோசனை குழுவில் இடம்பெற்ற 17 பேர் ஆதரவு அளித்ததால் பைசர் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
24 மணி நேரத்துக்குள்...
தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது:-அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் தடுப்பூசி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதை அந்தந்த மாகாண கவர்னர்கள் முடிவு செய்வார்கள்.
குறையும்
மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இந்த தடுப்பூசி கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளை குறைக்கும் என்றார்.
அனைவருக்கும் இலவசம்
மேலும், டிரம்ப் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒரு மருத்துவ அதிசயமாகும். இந்த நேரத்தில் அனைத்து விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இந்த தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.