டிரம்ப் வீசிய அடுத்த இடி.. H-1B விசா, கிரீன் கார்டு பெற விரும்பும் இந்தியர்களுக்கு பெரிய சிக்கல்
வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகம் விசா சார்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்குப் பல்வேறு வழிகளில் சிக்கலைக் கொடுத்து வருகிறது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது பிறப்பித்துள்ள புதிய உத்தரவு ஹெச் 1பி விசா மற்றும் கிரீன் கார்டு பெற விரும்பும் இந்தியர்களுக்குப் பெரும் சிக்கலைத் தருவதாக இருக்கிறது.
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கும் கூட டிரம்ப் நடவடிக்கைகள் சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது.

டொனால்ட் டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறையின் மே 2025க்கான விசா அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. H-1B விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை பெற விரும்பும் இந்தியர்களுக்குச் சிக்கலைத் தருவதாக இந்த அறிவிப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான EB-5 பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு இது பிரச்சினையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இந்த புதிய அறிவிப்பின்படி, EB-5இன் முன்பதிவு செய்யப்படாத பிரிவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் கட் ஆப் தேதி 2019 நவம்பர் 1ம் தேதியில் இருந்து 2019 மே 1 என்று ஆறு மாதங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இது தகுதி பெறும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். மேலும், அமெரிக்க கிரீன் கார்டு பெறுவதையும் தாமதமாக்குகிறது. அதேநேரம் சீன விண்ணப்பங்களுக்கு எந்தவொரு மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அவர்களின் EB-5 கட்ஆஃப் தேதி ஜனவரி 22, 2014 என்று மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
இபி என்றால் என்ன
அதாவது EB என்பது வேலை அல்லது முதலீடு மூலம் விசா அல்லது கிரீன் கார்டு பெறுவது. இதில் EB 1 முதல் EB 5 வரை வகைகள் உள்ளன. அமெரிக்காவை அங்குப் பல்வேறு நாட்டினரும் வருவதால் ஒவ்வொரு நாட்டிற்கும் இவ்வளவு ஹெச் 1 பி உட்பட வேலை விசா அல்லது கிரீன் கார்டு தான் என்று ஒரு அதிகபட்ச லிமிட் இருக்கும். ஒருவேளை அந்த எண்ணிக்கையை விட அதிகப் பேர் விண்ணப்பிக்கும்போது கட் ஆப் தேதி அறிவிக்கப்படும். அதிக பேர் விண்ணப்பிப்பதால் கட் ஆப் தேதிக்கு முன்பு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
இந்தியர்கள் மற்றும் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் அதிகரித்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாற்றப்பட்ட கட் ஆப் தேதி
EB-5 என்பது தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். அமெரிக்காவில் உள்ள கிராமப்புறங்கள், அதிக வேலையின்மை பகுதிகளில் முதலீடு செய்வோருக்கு விசா வழங்குவதே இந்தத் திட்டம். இருப்பினும், இந்த பிரிவில் இந்தியர்கள் விசா மற்றும் கிரீன் கார்டு பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே கட் ஆப் தேதி மாற்றப்பட்டுள்ளது.
விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதில் இந்த கட் ஆப் தேதி முக்கியமானது. அதாவது 2019 மே 1ம் தேதிக்கு முன்பே முதலீடு செய்து EB-5ஐ நிரப்பிக் கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பிராசஸ் செய்யப்படும் என்பதே அடிப்படை. இதற்கு முன்பு இந்த கட ஆப் தேதி நவம்பர் 2019ஆக இருந்த நிலையில், அதைத் தான் ஆறு மாதம் முன்கூட்டி மாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியர்கள் விசா பெறுவது மேலும் கடினமாகும்.
இதர வேலைவாய்ப்பு விசாக்கள்
அதேநேரம் வேலைவாய்ப்பு சார்ந்த பிற பிரிவுகளில் சிறிதளவு மற்றும் இந்தியர்களுக்கு கட்ஆப் தேதி மாற்றப்பட்டுள்ளது. EB-3 பிரிவில் கட்ஆஃப் தேதி ஏப்ரல் 15, 2013 இரண்டு வாரங்கள் மட்டுமே முன்கூட்டி மாற்றப்பட்டுள்ளது. EB-1 பிரிவின் தேதி 2022 பிப்ரவரி 2ஆகவும் EB-2 பிரிவு 2013 ஜனவரி 1ம் தேதியாகவும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications