"இந்தியர்கள் அகற்றப்படுவார்கள்.." கைவிலங்குடன் நாடு கடத்தல் சம்பவம் முடிவதற்குள் அடுத்த அதிர்ச்சி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர். கை, கால்கள் கைவிலங்கினோடு அவர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் பெரும் பேசுபொருள் ஆனது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் மைக்கேல் டபிள்யூ பேங்க்ஸ், கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தக் கருத்துகளைத் தான் முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.

அதிபர் தேர்தலில் வென்று அவர் அதிபராகப் பதவியேற்ற சூழலில், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்த உத்தரவிட்டு வருகிறார். ஏற்கனவே, சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
நாடு கடத்தல்:
இதற்கிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியே இந்தியர்களின் முதல் பேட்ச் சமீபத்தில் தான் நாடு கடத்தப்பட்டனர். மொத்தம் 104 பேர் கைவிலங்கிடப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இதே நிலையில் சுமார் 24 மணி நேரம் வரை பயணிக்க வேண்டி இருந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் எல்லை பாதுகாப்புப் படையான யுஎஸ்பிபி (US Border Patrol) இந்தியர்கள் கைவிலங்கிட்டு விமானத்தில் அழைத்துச் செல்லப்படும் வீடியோவை பகிர்ந்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் மைக்கேல் டபிள்யூ பேங்க்ஸ் இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது போல இருக்கிறது..
இந்தியர்கள் மீது சாடல்:
அவர் மேலும், "யுஎஸ்பிபி மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் ஏலியன்களை (சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்) வெற்றிகரமாக இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது. ராணுவ விமானம் மூலம் தொலைதூர நாட்டிற்கு வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.. குடியேற்றச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தவும் இந்த மிஷன் மிக முக்கியமாக உதவுகிறது. நீங்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தால், அகற்றப்படுவீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அத்துடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மொத்தம் 24 நொடிகளில் ஓடும் அந்த வீடியோவில் சி-17 விமானம் மூலம் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரவு நேரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்,அவர்கள் நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது..
USBP and partners successfully returned illegal aliens to India, marking the farthest deportation flight yet using military transport. This mission underscores our commitment to enforcing immigration laws and ensuring swift removals.
— Chief Michael W. Banks (@USBPChief) February 5, 2025
If you cross illegally, you will be removed. pic.twitter.com/WW4OWYzWOf
யாருக்கு ஆபத்து:
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு இந்தியர்கள் தான் அதிகமாகக் குடியேறி வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் முறையாக ஹெச் 1 உள்ளிட்ட விசா பெற்றே அங்குச் செல்கிறார்கள். இருப்பினும், பலர் முறையான விசா இல்லாமல் அங்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு எதிராகவே டிரம்ப் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார். வரும் நாட்களில் அமெரிக்க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.












Click it and Unblock the Notifications