அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்.. 55 ஆயிரம் கட்டடங்களில் மின்சாரம் துண்டிப்பு.. வருகிறதா சுனாமி?
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, வணிக நிறுவனங்கள் என்று மொத்தம் 55 ஆயிரம் இடங்களில் மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ரிக்டரில் 6.4 என பதிவாகி இருந்தாலும் கூட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை.
அமெரிக்காவில் சில இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படாத நிலையில் இன்று திடீரென்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா. இந்த மாகாணத்தின் வடக்கில் கடலோர பகுதிகள் உள்ளன.
அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்.. டெக்சாஸில் மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ரிக்டரில் 5.4 ஆக பதிவு..
குலுங்கிய வீடுகள்
இந்நிலையில் தான் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹம்போல்ட் கவுண்டி, பெர்ன்டால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் என்பது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் குலுங்கின. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்து உருண்டன. இதனால் வீடு, வணிக நிறுவனங்களில் இருந்தவர்கள் வேகமாக வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.
கண்ணாடிகள் உடைந்தன
இந்த நிலநடுக்கம் என்பது சில வினாடிகள் நீடித்தது. அதன்பிறகு இயல்பு நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சில வீடுகள், வணிக நிறுவனங்களில் எதிரொலித்தது. அதன்படி சில இடங்களில் உள்ள கண்ணாடிகள் உடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்படவில்லை.
ரிக்டரில் 6.4 என பதிவு
இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்காவின் புவியியல் மையம் கூறுகையில், ‛‛அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்ன்டால் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 12 கிலோமீட்டரில் பூமிக்கடியில் 16.1 கிலோமீட்டரில் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை இல்லை
மேலும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் கடலோர பகுதியாகும். இதனால் சுனாமி ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெர்ன்டால் மற்றும் ஹம்போல்ட் கவுண்டி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் என சுமார் 55 ஆயிரம் கட்டடங்கள் மின்சாரம் இன்றி உள்ளன. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது.
3 நாளில் 2வது நிலநடுக்கம்
முன்னதாக கடந்த 17 ம் தேதி அமெரிக்காவின் மேற்கு பகுதியான டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் ஏற்பட்டது. இதிலும் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் சேதம், உயிர் பலி ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 என பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் அடுத்த 3 நாட்களுக்குள் கலிபோர்னியாவில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.