தோல்வியை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுப்பு.. தேர்தல் முடிய காலம் இருக்கிறது.. தடாலடி அறிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக பெரும்பாலான அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலும் தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் ஓட்டுகள் மட்டுமே பெற முடிந்தது. ஜோ பிடன் 290 ஓட்டுகள் பெற்றுள்ளதாக அசோசியேட் பிரஸ், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோல்வியை ஏற்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் தரத் தயாராக இல்லை. அவரது பிரச்சார குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பாருங்கள்:
ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு மீடியாக்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும் உண்மையை மறைப்பதற்காக இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவடைவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.
வீழ்த்தப்பட்டார் டொனால்ட் டிரம்ப்... ஆனால் அவர் விதைத்து விட்டுப் போகும் "விதை"....!
உதாரணத்திற்கு பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது என்பதை கண்காணிப்பதற்கு எங்களது சட்ட வல்லுநர் குழு அனுமதிக்கப்படவில்லை. மீடியாக்களின் செய்தி யார் அமெரிக்காவின் அதிபர் என்பதை தீர்மானிக்காது. சட்டப்படியான வாக்குகள்தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
வரும் திங்கள்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். சட்டவிரோதமான போலியான வாக்குகளை எண்ணக்கூடாது. இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும். இவ்வாறு டொனால்டு டிரம்ப் பிரச்சார குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டேன். பெரிய வெற்றி பெற்று விட்டேன் என்று டுவிட்டரில் டொனால்ட் ட்ரம்ப் பதிவு செய்திருந்தார். ஆனால் இது ஆதாரபூர்வமற்ற கருத்து என்று டுவிட்டர் எச்சரிக்கை பிறப்பித்திருந்தது.