சஸ்பென்ஸா இருக்கே.. கனடா விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா உறவு பாதிப்பு? அமெரிக்கா முக்கிய விளக்கம்
வாஷிங்டன்: இந்தியா கனடா மோதல் தொடரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா நிலைப்பாடு என்று ஒரு தகவல் வெளியானது. இதற்கிடையே அதற்கு அமெரிக்கா முக்கிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்கு முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து இந்தியா கனடா உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
இந்தியா கனடா: இந்தியா ஆதாரத்தை வெளியிடச் சொன்னாலும் கனடா எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை. 5 ஐஸ் உளவு கூட்டமைப்பில் இருந்து வந்த தகவல் அடிப்படையிலேயே கனடா இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக 5 ஐஸ் உளவு கூட்டமைப்பில் இருக்கும் அமெரிக்கா தான், இந்த விவகாரத்தில் கனடாவுக்கு உளவுத் தகவல்களைக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், என்ன ஆதாரம், எந்த மாதிரியான தகவல்கள் என்று தெரியவில்லை.இந்தியா கனடா மோதல்.. திடீரென உள்ளே வரும் அமெரிக்கா? அந்த 5 பேரும் சொல்லும் மேட்டரை நோட் பண்ணுங்க
இந்த விவகாரத்தில் அமெரிக்காவைப் பொறுத்தவரை நேரடியாகப் பெரியளவில் தலையிடவில்லை. ஏனென்றால் ஒரு பக்கம் அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகள்... நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. மற்றொரு புறம் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க இந்தியாவின் நட்பும் அமெரிக்காவுக்குத் தேவை. இதனால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. அதேநேரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மட்டும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
அமெரிக்கா: இதற்கிடையே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி இப்போது கூறியுள்ள கருத்துகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கனடா உடனான மோதல் போக்கு காரணமாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தனது குழுவிடம் எரிக் கார்செட்டி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மீண்டும் அறிவிப்பு வரும் வரை இந்திய அதிகாரிகளுடனான தொடர்புகளை அமெரிக்கா குறைக்க வேண்டும் என்றும் கார்செட்டி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை அமெரிக்கச் செய்தி நிறுவனமான பொலிட்டிகோ வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சற்று எச்சரிக்கையாக இருக்கவே விரும்புவதாக பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.
மோசமாகப் பாதிக்கும்: பைடன் நிர்வாகத்தில் சிலர் பிரதமர் நரேந்திர மோடியுடனான அமெரிக்காவின் உறவு, அடுத்த வரும் காலத்தில் மிகவும் மோசமாகிவிடும் என்று நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கனடா விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா உறவில் பாதிப்பு ஏற்படாது எனத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது அதற்கு நேர்மாறான தகவல் வந்துள்ளது. இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
மறுப்பு: இதற்கிடையே இந்த தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தகவலை அமெரிக்கத் தூதரகம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தத் தூதர் கார்செட்டி கடுமையாக உழைத்து வருகிறார். இந்தியாவுடன் நாம் கொண்டுள்ள உறவை மேம்படுத்தவே அவர் உழைத்து வருகிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா கனடா இடையேயான மோதல் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டிற்குப் பிறகு தொடர்ந்தே வருகிறது. முதலில் இரு நாடுகளும் தூதர்களை வெளியேற்றினர். தொடர்ந்து கனடா நாட்டவருக்கு விசா வழங்கப்போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை இந்தியா வெளியிட்டது. இப்போது வரும் அக். 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள 41 கனடா தூதர்களை வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications