கனடாவிடம் ஆதாரமே இல்லை.. காலிஸ்தானி கொலை! விளாசிய அமெரிக்க- இந்திய கூட்டமைப்பு! இது முக்கியமாச்சே
வாஷிங்டன்: இந்தியா கனடா மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதாக அமெரிக்க-இந்திய ஸ்டேடர்ஜி கூட்டமைப்பின் தலைவர் சாடியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. சமீப காலமாகவே இந்தியா- கனடா உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்கு முக்கிய காரணம்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி ஆவார். இந்தியாவில் பயங்கரவாதியாக இருந்தாலும் அவர் கனடாவில் சுதந்திரமாகவே இருந்து வந்தார். அங்கே அவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்பையும் நடத்தி வந்தார்.
இந்தியா கனடா மோதல்: கடந்த ஜூன் மாதம் அவரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்தன. முதலில் இரு நாடுகளில் இருந்து தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு தங்கள் சொந்த நாட்டினருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
மேலும், கனடா நாட்டவருக்கு மறு அறிவிப்பு வரும் வரை விசாக்கள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியா தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தைக் கேட்கிறது. இருப்பினும், ஆதாரத்தை வெளியிடாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதையே கனடா வேலையாக வைத்துள்ளது.
ஆதாரம் இல்லை: இதற்கிடையே இந்தியா கனடா மோதல் குறித்து அமெரிக்க-இந்திய ஸ்டேடர்ஜி கூட்டமைப்பின் சிஇஓ முகேஷ் அகி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடாமல் இந்தியா மீது குற்றஞ்சாட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முகேஷ் அகி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கனடா குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இதில் முக்கிய பிரச்சினையே நிஜ்ஜாரின் கொலை விவகாரம் என்பது எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது... ஒரு நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்தில் சில குற்றச்சாட்டுகளைச் சொல்வதும் பிறகு அதற்கான ஆதாரங்களை வழங்க முடியாமல் போவதும் துரதிருஷ்டவசமானது.
உறவு மோசமாகிறது: இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு மோசமாகி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே பெரிய வர்த்தகம் இருக்கிறது. சுமார் 30,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்கிறார்கள். கனடாவும் இந்தியாவில் 55 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் யோசித்த பொறுமையாக மற்றும் முதிர்ச்சியுடன் கூடிய முடிவை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் இந்தியா-அமெரிக்க உறவுகளில் குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.. ஏனென்றால் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க கனடா அமெரிக்காவைப் பயன்படுத்தப் போகிறது. அமெரிக்க-இந்திய உறவு என்பது புவிசார் அரசியல் தொடர்பானது.. அது பொருளாதார பிரச்சினைகளுடன் இணைந்துள்ளது.
கனடா விவகாரம் இந்தியா அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற போதிலும், அது நீண்ட காலத்திற்கு இருக்காது. இந்த பாதிப்பு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். நீண்ட கால நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications