ரெடியாகும் அமெரிக்கா.. இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆஹா ரொம்ப முக்கியம்
வாஷிங்டன்: இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் நெருங்கி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். வர்த்தகப் பற்றாக்குறையை நீக்குவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் அரசு ஏற்கனவே உலக நாடுகளுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கும் சூழலில், இந்தியா தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த ரெசிப்ரோக்கல் வரி இப்போது மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது. அவர் அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்த சூழலில், அந்தக் காலக்கெடு நிறைவடைகிறது. இதற்கிடையே புதிய ரெசிப்ரோக்கல் வரி தொடர்பாகவும் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அதிபர் டிரம்ப் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இருவரும் நேற்று டின்னரில் பங்கேற்றனர். அப்போது இரவு விருந்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் இந்தியாவுடன் சீக்கிரம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யவுள்ளோம். அது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. பிரிட்டன் உடன் ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டோம். சீனாவுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டோம்" என்று கூறினார்.
அமெரிக்கா சீனா இடையே இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.. பேச்சுவார்த்தையே தொடர்ந்து நடந்து வருகிறது. சீனா இது தொடர்பாக எந்தவொரு கருத்துகளையும் கூறுவதில்லை. ஆனால், டிரம்ப் மட்டுமே ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாகத் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இப்போதும் கிட்டத்தட்ட அதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்.
கூடுதல் வரி
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "முக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் விதிமுறைகளுக்கு உட்படாத மற்ற நாடுகள் புதிய வரிகளைச் சந்திக்க நேரிடும்.. சில நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.. ஆனால் அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். எனவே, அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறோம். அவர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்து கடிதங்களை அனுப்புகிறோம்" என்றார்.
இந்தியா
இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் கட்டமைப்பு அல்லது அது எப்படி இருக்கும் என்பது குறித்து விவரங்கள் எதையும் டிரம்ப் வழங்கவில்லை. ஆனால், நியாயமான காரணங்கள் இருக்கும் நாடுகள் உடன் அட்ஜெஸ்ட் செய்து கொள்வோம் என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "சில நாடுகளுக்குக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்லும் காரணம் நியாயமாக இருந்தால் நாங்கள் பரிசீலிப்போம்" என்றார்.
நேற்றைய தினம் ஜப்பான், தென் கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதிகள் மீது வரிகளை டிரம்ப் உயர்த்தினார். இந்த வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள்
தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 25% வரி எதிர்கொள்ளும். மியான்மர் மற்றும் லாவோஸ் நாடுகள் 40% வரி விதிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்கா 30% வரி மற்றும் கஜகஸ்தான், மலேசியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் 25% வரிகளை எதிர்கொள்ளும். இந்தோனேசியா மீது 32% வரி விதிக்கப்படும் நிலையில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா 30% வரியும் வங்கதேசம் மற்றும் செர்பியா நாடுகள் 35% வரியைச் செலுத்த வேண்டும். கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மீது அதிகபட்சமாக 36% வரிகள் விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications