வரலாறு திரும்புதே! அமெரிக்காவில் மீண்டும் பைடன் vs டிரம்ப்.. ஆனா இருவருக்கும் அதிர்ச்சி காத்திருக்கு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதில் அதிபர் பைடன் மற்றும் டிரம்ப் மீண்டும் மோதுவது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது.
உலக வல்லரசான அமெரிக்காவில் எப்போதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி அங்கே இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

அங்கே குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரண்டு கட்சிகள் மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே தான் எப்போதும் போட்டி இருக்கும்.
அதிபர் தேர்தல்: அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வே மிகவும் சுவாரசியமாக இருக்கும். இரண்டு கட்சிகள் மட்டுமே பிரதான கட்சியாக இருப்பதால் இரு கட்சிகள் சார்பிலும் போட்டியிட பல்வேறு வேட்பாளர்களும் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு.. அவர்களில் யாருக்குச் செல்வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
மேலும், அமெரிக்காவில் ஒருவரால் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். இதன் காரணமாக சிட்டிங் அதிபர் முதல்முறை அதிபராக இருந்தால் அவரே மீண்டும் போட்டியிடுவார். அதன்படி இந்த முறை ஜனநாயக கட்சி சார்பில் பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியில் யாரும் பெரிதாகக் களமிறங்கவில்லை.
டிரம்ப்: அதேநேரம் குடியரசு கட்சியில் அப்படி இல்லை. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தனர். நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி எனப் பலரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கே மாகாணம் வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாஷிங்டன் தவிர இதுவரை உட்கட்சி நடந்த அனைத்து மாகாணங்களிலும் டிரம்ப் தான் வெற்றி பெற்றார். இது டிரம்பிற்கு குடியரசு கட்சியில் எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. இதன் பிறகு உட்கட்சி தேர்தல் நடக்கும் மாகாணங்களால் எந்தவொரு மாற்றமும் வந்துவிடாது.
டிரம்பிற்கு உள்ள அதிர்ச்சி: இதன் மூலம் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் பைடன் மற்றும் டிரம்ப் மோதுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2020இல் இருவரும் மோதிக்கொண்ட நிலையில், இப்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. 81 வயதாகும் பைடன் ஏற்கனவே அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராக உள்ளார். அதே நேரம் மறுபுறம் 77 வயதான டிரம்ப் மீது ஏற்கனவே நான்கு கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. இருவரும் இந்தாண்டு இறுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளனர்.
அமெரிக்காவில் இரு தலைவர்கள் அதிபர் தேர்தலில் மீண்டும் நேருக்கு நேர் போட்டியிடுவது 1956க்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. அப்போது குடியரசுக் கட்சித் தலைவர் டுவைட் டி. ஜனநாயகக் கட்சியின் அட்லாய் ஸ்டீவன்சன் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் கூட அங்கே இப்போது முதலே பிரச்சாரம் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
பைடனுக்கு ஷாக்: அமெரிக்காவில் இப்போது வரை வெளியாகியுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் வெல்லவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறியது. பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை பைடன் மீது மக்கள் கோபமாக இருக்க முக்கிய காரணங்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications