அடங்காத டிரம்ப்.. இந்தியாவின் 6 நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா! ஷாக் காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். அதிகப்படியான வரி மற்றும் அபராதத்தை விதிக்க உள்ளதாக கூறி வருகிறார். இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகும். இதற்கிடையே தான் நம் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளார். நம் நாட்டுக்கும் ஆகஸ்ட் 1ம் தேதி (நாளை) முதல் 25 சதவீத வரிவிதிப்பதாக அறிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் ஆட்டோமொபைல், மருந்துதுறை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த துறைகளில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கணிசமாக சரியும் நிலை உருவாகி உள்ளது.
சிக்கிய 6 இந்திய நிறுவனங்கள்
இதற்கிடையே தான் தற்போது அமெரிக்கா நம் நாட்டின் 6 நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்களை வாங்கியதாக கூறி இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சன் பாலிமர்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கம்பெனி, ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
இந்த நிறுவனங்கள் ஈரானில் இருந்து மெத்தனால் டொலுயீன், பாலிஎத்திலீன் உள்ளிட்டவற்றை ஈரானிடம் இருந்து வாங்கி உள்ளன. கடந்த 2024 ஜனவரி மாதம் மதல் 2025 ஜனவரி மாதம் வரை இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பை வைத்துள்ளன. இதனால் அந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் காஞ்சன் பாலிமர்ஸ் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டானாய்ஸ் டிரேடிங் மூலம் 1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாலிஎத்திலீனை வாங்கி உள்ளது. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 84 மில்லியன் டாலருக்கும் அதிக பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கி உள்ளது. ஜூபிடர் டை கெம் நிறுவனம் 49 மில்லியன் டாலருக்கு டொலுயீன் உள்பட பெட்ரோ கெமிக்கல்கள் பொருட்களையும் இறக்குமதி செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேபோல் குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது. அதேபோல் 14 மில்லியன் மதிப்புள்ள இறக்குமதி செய்ததற்காக பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து ஐக்கி அரபு எமிரேட்ஸ் வழியாக இந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார தடை ஏன்?
இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் கடுமையான மோதல் போக்கு உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானை முடக்கும் வகையில் இந்த பொருளாதார தடைகள் அமலில் உள்ளன.
உத்தரவிட்டது யார்?
இதனால் ஈரானிடம் கச்சா எண்ணெய், எரிவாயு உள்பட பிற வர்த்தகங்களில் ஈடுபடும் நாடு மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நம் நாட்டின் 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் இன்னும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா தலையீடு செய்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. மேலும் ஈரானை தொடர்ந்து முடக்கும் வேலைகளில் டிரம்ப் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications