சீனா- பாகிஸ்தான் நெருக்கம்.. நாடாளுமன்றத்தில் ராகுல் கூறிய கருத்துகளை ஒப்பு கொள்ள அமெரிக்கா மறுப்பு
வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திறனற்ற கொள்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருவதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறியதை நாங்கள் ஒப்புக் கொள்ளமாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறுகையில் சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைப்பதுதான் இந்தியாவின் இலக்கு ஆகும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் திறமையற்ற வெளியுறவுக் கொள்கை மூலம் இரண்டையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றிணைத்து வைத்துவிட்டார்.

அச்சுறுத்தல்
நாம் என்ன மாதிரியான சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இது உண்மையில் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இந்த ஆண்டு குடியரசுத் தினத்திற்கு எந்த உலகத் தலைவர்களும் வரவில்லை. இதற்கு காரணம் நம் நாடு முற்றிலும் தனித்து விடப்பட்டுவிட்டது. நம்மை சுற்றி நேபாளம் , ஆப்கானிஸ்தான், சீனா உள்ளது. இது இந்திய மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட மிகப் பெரிய குற்றமாகும் என்றார்.

வெளியுறவுக் கொள்கை
இந்திய பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்த ராகுல் காந்தியின் கருத்தை நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திறனற்ற கொள்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருவதாக கூறியுள்ளார்.

வெளியுறவுத் துறை
இந்த கருத்தை அமெரிக்கா வெளியுறவுத் துறை ஒப்புக் கொள்கிறதா என கேள்வி எழுப்பினார். இதை நான் பாகிஸ்தானியர்கள் மற்றும் சீன மக்களிடமே விட்டு விடுகிறேன். அவர்கள்தான் அவர்களுக்கிடையே எந்தமாதிரியான உறவு இருக்கிறது என்பதை விளக்குவார்கள். நான் நிச்சயமாக ராகுலின் கருத்துகளை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றார்.

அமெரிக்கா
பாகிஸ்தானையும் சீனாவையும் அமெரிக்கா கைவிட்டுவிட்டதால் அவை இரண்டும் நெருக்கமாகிவிட்டதா என பிரைஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பதை முடிவு எடுக்க உலகின் எந்த நாட்டுக்கும் தேவையில்லாத ஒன்று என்பதை நாங்கள் பல முறை கூறியுள்ளோம். அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ளது பாகிஸ்தான். இஸ்லாமாபாத் அரசுடன் முக்கிய உறவை கொண்டுள்ளோம் என்றார்.

சீனாவுக்கு அவமானம்
பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடார் துறைமுகத்தில் சீனா பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான்- சீனா இடையே நட்புறவு கணிசமாக வளர்ந்துள்ளது. பெய்ஜிங்கில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீன வீரரை ஒலிம்பிக் ஜோதி ஏந்த வைத்தது சீனாவுக்கு அவமானம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா- சீனா இடையே மோதல்
கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்தியர்கள் வீரமரணமடைந்தனர். ஆனால் சீனாவில் 38 பேர் வரை இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில் அது உண்மையான உயிரிழப்பை மூடி மறைப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்த மோதலில் இந்தியாவுடன் மோதி தலையில் காயமடைந்தவர் குயி ஃபேபோ. இவர் மக்கள் விடுதலை ராணுவத்தின் படைப்பிரிவு கமாண்டராக உள்ளவர். இவர் நேற்று பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் தொடக்க போட்டியில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி சென்றார்.

ஆதரவு
இதுகுறித்து அமெரிக்காவின் செனேட் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் மூத்த தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்திய சீன ராணுவ வீரர் ஒலிம்பிக் ஜோதி ஏந்த தேர்வு செய்யப்பட்டது அவமானகரமானதாகும். உய்குர் மக்களின் விடுதலைக்கும் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications