The Great Depression: மந்த நிலை நோக்கி நகரும் அமெரிக்கா! ஒரேயடியாக படுத்த பங்கு சந்தை!
வாஷிங்டன்: கோவிட் தொற்று காலத்திற்கு பின்னர் அமெரிக்காவின் பங்கு சந்தை தற்போது மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. இதனால் அந்நாடு 'மந்தநிலையை' (The Great Depression) நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவுக்கும் பிரச்சனைதான்.
அமெரிக்க பங்கு சந்தை இரண்டாவது நாளாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்கு சந்தையின் மூன்று முக்கிய குறியீடுகளும் ஒரே நாளில் 5% க்கும் அதிகமாக சரிந்துள்ளன. இதனால் பொருளாதார அச்சம் எழுந்திருக்கிறது.

1. Dow Jones
2. S&P 500
3. Nasdaq Composite
இவை மூன்றும்தான் அமெரிக்க பங்குசந்தையின் மிக முக்கியமான குறியீடுகளாகும். இதில் முதலில் உள்ள Dow Jones-ல் 30 பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. இது அமெரிக்காவின் முதுகெலும்பை போன்றது. எவ்வளவுதான் பொருளாதார பாதிப்புகள் வந்தாலும் அது இந்த நிறுவனங்களை பாதிக்காது. காரணம் இந்நிறுவனங்கள் காலங்காலமாக அமெரிக்க வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்திருக்கின்றன. எனவே ஏராளமான அனுபவத்தை கொண்டிருக்கிறது. தொழில்துறை, நிதி, சுகாதாரம், வாடிக்கையாளர் சேவைகளில் இந்த நிறுவனங்கள்தான் கெத்து.
ஆப்பிள், போயிங், கோகோ-கோலா, மெக்டொனால்ட்ஸ் ஆகியவை எல்லாம் இந்த 30 நிறுவனங்களின் லிஸ்ட்டில் வரும். இவை அனைத்துமே ஜாம்பவான் நிறுவனங்கள்.
இரண்டாவதாக இருக்கும் S&P 500 குறியீட்டில் 500 பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், எரிசக்தி ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இதில் இடம் பிடித்திருக்கின்றன. இவை அமெரிக்க பங்குச் சந்தையின் ஒரு பரந்த மற்றும் சமநிலையான பிரதிநிதியாக பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட், அமேசான், ஜான்சன் & ஜான்சன், ஜேபிமோர்கன் ஆகிய நிறுவனங்கள் இந்த லிஸ்ட்டில் வரும்.
மூன்றாவது குறியீடு Nasdaq Composite. இதில் 3000க்கும் அதிகமான நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களாகும். Google (Alphabet), Meta (Facebook), Tesla, NVIDIA, Netflix ஆகியவை இந்த லிஸ்ட்டில் வரும்.
பிரச்சனை என்னவெனில் இந்த 3 குறியீடுகளில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 5% பங்கை இழந்திருக்கின்றன. இதில் மூன்றாவதாக சொன்ன 'Nasdaq Composite' குறியீடு 'கரடி சந்தை' (bear market) நிலைக்கு சென்றுள்ளது. அதாவது இந்த குறியீட்டில் உள்ள நிறுவனங்கள் அதன் உச்ச நிலையிலிருந்து 20% அல்லது அதற்கு மேல் வீழ்ச்சியடைந்தால், அதனை 'கரடி சந்தை' என்று அழைப்பார்கள்.
சரிங்க பங்கு சந்தை சரிந்தால் என்ன பிரச்சனை? என்று கேட்கிறீர்களா! இந்த விஷயத்தின் தீவிர தன்மை பற்றி பேசிய அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவெல், "டிரம்ப்பின் வரி காரணமாக வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். ஏராளமானோர் வேலையை விட்டு துரத்தப்படுவார்கள். பணவீக்கம் அதிகரிக்கும்" என்று எச்சரித்துள்ளார். வழக்கம்போல இந்த எச்சரிக்கையை காதில் வாங்கிக்கொள்ளாத டிரம்ப், ஆகட்டும் வேலையை பாருங்கள் என்கிற தொணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது அமெரிக்கா பொருளாதார மந்தநிலையில் சிக்கியது நினைவுக்கு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போதைய சூழல் அந்த அளவுக்கு மோசமாக இல்லை என்றாலும், இப்படியே போனால் கடைசியில் அங்குதான் போய் நிற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். அமெரிக்க பங்குசந்தை சரிவு, இந்தியாவையும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் உஷாராகி முதலீடுகளை செய்யாமல் தவிர்ப்பார்கள். இதனால் நம்நாட்டு பங்கு சந்தையும் அடிவாங்க வாய்ப்பு இருக்கிறது.
என்னதான் நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போமே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.












Click it and Unblock the Notifications