வூஹான் மையத்திலிருந்து கொரோனா.. கடந்த ஆண்டே அறிக்கை அளித்த அமெரிக்க ஆய்வாளர்கள்.. வெளியான ரகசிய தகவல்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டே தங்களின் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் கோரத் தாண்டவம் கடந்த 2 ஆண்டுகளாகவே உலகில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. மனிதக்குல வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொரோனா வைசருக்கான தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

கொரோனா தோற்றம்
இருந்தாலும்கூட கொரேனா வைரஸ் எப்படித் தோன்றியது என்பது குறித்து நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளும் தனியாக நடைபெற்று வருகிறது. முதலிலேயே வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும். அப்போது சர்வதேச அளவில் பலர் இந்த வூஹான் ஆய்வகம் தகவலை நம்பவில்லை. இதனால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

வைரஜி மையம்
இந்தாண்டு சீனாவில் ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களும்கூட கொரோனா ஆய்வு மையத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவித்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கை மீண்டும் வூஹான் வைரலாஜி மையக் கருத்தை வலுசேர்த்துள்ளது.

லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம்
அமெரிக்க புலனாய்வுத் துறையின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் கொரோனா தோற்றம் தொடர்பாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை தற்போது சில அமெரிக்க எம்பிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வூஹான் ஆராய்ச்சி மையம்
இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா ஆய்வாளர்கள் genomic analysis முறையில் சோதனை நடத்தியுள்ளனர். அதில் வூஹான் வைரலாஜி மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை ஆராய்ச்சியாளர்கள் டிரம்ப் நிர்வாகத்திடமே அளித்துள்ளனர்.

அமெரிக்கா புலனாய்வுத் துறை
கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையின் ஒரு பகுதி செய்தித்தாள்களில் வெளியானது. அதில் கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து தவறுதலாக வெளியாகியிருக்கலாம். அல்லது விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். இருப்பினும், இதில் எந்த முறையில் பரவியிருக்கும் என்பதை புலனாய்வுத் துறையால் உறுதியாகக் கூற முடியவில்லை.












Click it and Unblock the Notifications