US Tariff: பெரும் துரோகியான டிரம்ப்.. உலகிலேயே இந்தியாவுக்கு தான் அதிக வரி! சீனா, கனடாவை விட பலமடங்கு கூடுதல்
வாஷிங்டன்: இந்தியாவுக்கான 25 சதவீத வரியை இன்று 50 சதவீதமாக டொனால்ட் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார். இதன்மூலம் உலகிலேயே அமெரிக்காவின் அதிக வரிகளை எதிர்கொள்ளும் நாடாக இந்தியா மாறி உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பரம எதிரியான சீனா, கனடாவை விட இந்தியா பல மடங்கு வரிகளை டிரம்ப் விதித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு உக்ரைன் மீதான போர் தான் முக்கிய காரணம். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஆனால் நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36 முதல் 38 சதவீதம் வரை ரஷ்யா தான் பூர்த்தி செய்கிறது. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. இதனால் டிரம்ப் கடும் கோபமடைந்தார்.
முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி இந்தியா மீது 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு 7 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். மேலும் இடைப்பட்ட காலத்திலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறினார். ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. தேச நலன் தான் முக்கியம் எனக்கூறி ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இதையடுத்து இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதில் கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 6 நாளில் மட்டும் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்து இருப்பது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை மொத்தமாக முடக்க உள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்றைய உத்தரவின் மூலமாக உலகிலேயே டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை இந்தியாவுக்கு தான் விதித்துள்ளது உறுதியாகி உள்ளது.
அதாவது நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நம் நாடும், பிரேசிலும் நட்பு நாடுகளாகும். இருநாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க வேண்டும் என்று பிரேசில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டிரம்ப் அந்த நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தார். தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் நம் நாட்டுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் நாடு ஸ்வீட்சர்லாந்து. இந்த நாட்டுக்கு டிரம்ப் 39 சதவீத வரியை விதித்துள்ளார். 3வது இடத்தில் 2 நாடுகள் உள்ளன. ஒன்று கனடா, இன்னொன்று ஈராக். இந்த 2 நாடுகளுக்கும் 35 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
இதில் கனடா, அமெரிக்காவின் அண்டை நாடாகும். கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக டிரம்ப் இணைக்கும் ஆசையை கூறினார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே கடும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கனடாவை பழிதீர்க்க 35 சதவீத வரியை டிரம்ப் போட்டுள்ளார்.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் பரமஎதிரியான சீனா 4வது இடத்தில் தான் உள்ளது. சீனாவுக்கு தொடக்கத்தில் டிரம்ப் அதிரடியாக வரிகளை விதித்தார். சீனாவும் போட்டி போட்டு வரிகளை உயர்த்தியது. இதனால் மூக்குடைந்த டிரம்ப் சீனாவுக்கான வரியை தற்காலிகமாக நிறுத்தினார்.
இருப்பினும் சீனாவுக்கு தற்போது டிரம்ப் 30 சதவீத வரியை விதித்துள்ளார். இப்படி அமெரிக்காவுக்கு எதிரியாக உள்ள சீனா, கனடாவை காட்டிலும் இந்தியாவுக்கு தான் தற்போது டிரம்ப் 50 சதவீதம் என்று கூடுதல் வரியை விதித்து இருப்பது நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்குமான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications