அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி ஆர்டர்! நிதி உதவி நிறுத்தம்.. கையை பிசையும் பாகிஸ்தான்!
வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டொனால்டு டிரம்பின் இந்த உத்தரவால் பாகிஸ்தானில் பல முக்கிய திட்டங்கள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை மறு மதிப்பீடு செய்து அவை குறைக்கப்படலாம் அல்லது நிரந்தரமாக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறி முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் கைவிட்டு வருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகியது, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது என இந்த பட்டியல் நீளும். அதேபோல இனி வெளிநாடுகளுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்த போவதாக டிரம்ப் கூறி வருகிறார். நாள்தோறும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப், தற்போது பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்த போவதாக அறிவித்துள்ளார்.
நிதி உதவி நிறுத்தம்
தற்காலிகமாக நிதி உதவியை நிறுத்த இருப்பதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமெரிக்கா சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச மேம்பாட்டு பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றில் பாகிஸ்தானில் கலாச்சாரப் பாதுகாப்புக்கான தூதர்கள் நிதியும் அடங்கும். பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், பூர்வீக மொழிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கைவினைப்பொருட்கள் போன்ற பாரம்பரிய கலாச்சார சின்னங்கள் ஆகியவற்றை பாதுகாக்க AFCP நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது.
ஐந்து திட்டங்களும் நிறுத்தப்படும்
இவை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை டிரம்ப் தனது எக்ஸ்கியூட்டிவ் ஆர்டர் மூலமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி உதவியை மறு ஆய்வு செய்ய ஏதுவாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த முடிவால் எரிசக்தி துறையில் ஐந்து திட்டங்களும் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுகாதாரம், வேளாண்மை வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு, வெள்ளம், பருவ நிலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாக நிதி உள்ளிட்டவையும் டிரம்ப் உத்தரவால் தடைபட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும் இந்த திட்டத்திறான நிதிகள் நிரந்தரமாக நிறுத்தப்படலாம் அல்லது கணிசமாக குறைக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
3 கேள்விகளுக்கு விடை
எனினும், பாதிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்போ, அமெரிக்கா தற்போது பாகிஸ்தானுக்கு எவ்வளவு நிதி வழங்கி வருகிறது என்பது பற்றிய விவரங்களோ தெரியவில்லை. முன்னதாக கடந்த வாரம், எந்த ஒரு நாட்டின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாம்மி ப்ரூச், அமெரிக்கா செலவிடும் நிதி உதவி மறு ஆய்வு செய்யப்படும் எனவும், செலவிடும் ஒவ்வொரு டாலரும், அளிக்கப்படும் நிதியும் மூன்று கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அதாவது, அமெரிக்காவை பாதுகாக்குமா? அமெரிக்காவை வலுவாக்குமா? அமெரிக்காவை மேலும் செழிப்பாக்குமா? என்ற மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications