"பயங்கர சத்தம்.. இனப்பெருக்கம் வேற.." லட்ச கணக்கில் திரள்வதால் மிரட்சி.. அமெரிக்காவில் அதிசயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்ற பகுதியில் ஒரே இடத்தில் அதீத சத்தத்துடன் இனப்பெருக்கம் நடக்கும் சம்பவங்கள் அரங்கேறப் போகிறது. அது என்ன சம்பவம்.. ஒரே இடத்தில் இப்படித் திரண்டு வந்து உடலுறவு கொள்ள என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இயற்கை என்பது பல அதிசயங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்காத பல அதிசயங்கள் உலகில் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு வினோதமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.

இனப்பெருக்கம்: அமெரிக்காவில் பல வகையான சிக்காடா, அதாவது சில்வண்டுகள் இருக்கிறது. இதனால் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதால் அமெரிக்காவில் இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த சிக்காடா வகைகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகப் பெரியளவில் ஒரே இடத்தில் திரண்டு இனச்சேர்க்கையில் ஈடுபட்டு, முட்டையிட்டு பின்னர் உயிரிழக்கும். இவை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
அங்குப் பல வகையான சிக்காடா இருக்கும் நிலையில், ஒவ்வொரு வகையும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி செய்யும். பொதுவாக அவை 13 அல்லது 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யும். ஏன் இதுபோல odd வருடங்களில் மட்டும் இனப்பெருக்கம் செய்கிறது என்பது ஆய்வாளர்கள் மத்தியில் மர்மமாகவே இருந்து வருகிறது.
இயற்கை அதிசயம்: அதேநேரம் இவை திரண்டு வரும் போல ஒரே நேரத்தில் பல லட்சம் சிக்காடாக்கள் வரும். அவை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். மேலும், இவை திரண்டு வரும் போது அவை பாலியல் ரீதியாகத் தூண்டப்பட்ட நிலையில் இருக்குமாம். ஆண் மற்றும் பெண் சிக்காடாக்கள் அதீத சத்தம் எழுப்பி உடலுறவு கொள்ளுமாம். இந்த இயற்கை அதிசயத்தை ஓடி ஓடிச் சென்று பார்க்கவே அமெரிக்காவில் பலர் இருக்கிறார்கள்.
இந்தாண்டு இதில் என்ன சிறப்பு என்றால் ஒரே நேரத்தில் இரண்டு வகையான சிக்காடாக்கள் இந்தாண்டு இனப்பெருக்க நிகழ்வில் ஈடுபடப் போகிறதாம். இதற்கு முன்பு 1803இல் தான் இதுபோல நடந்துள்ளது. அதன் பிறகு இப்போது தான் சுமார் 220 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. சமீபத்தில் தான் அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் நடந்து சூரியன் மொத்தமாக மறைந்த நிலையில், இப்போது சில வாரங்களில் மற்றொரு இயற்கை அதிசயம் நடக்கிறது.
என்ன நடக்கிறது: இந்த ஆண்டு நிகழ்வில் 13 ஆண்டுகள் உயிர் வாழும் ப்ரூட் 19 என்ற வகை இந்த மாஸ் இனப்பெருக்கத்தில் ஈடுபட உள்ளது. அதைத் தொடர்ந்து 17 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய ப்ரூட் 13 வகையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடப் போகிறது. இவை இரண்டும் மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணையலாம் என்று கூறப்படுகிறது.
அந்த இடத்தில் பல லட்சம் சிக்காடாக்கள், அதாவது சில்வண்டுகள் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளது. அந்த சிக்காடாக்களை டிராக் செய்து அவற்றை பார்க்க இப்போது அமெரிக்கர்கள் ரெடியாகிவிட்டார்களாம். இது பலரும் வியக்கும் ஒரு சம்பவமாக இருந்தாலும், இப்போது சிக்காடாக்கள் ஆபத்தில் இருக்கிறதாம்.
ஆபத்து: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிக்காடாக்கள் பெரும் ஆபத்தில் இருக்கிறது. குறிப்பாகப் புவி வெப்ப மயமாதல் என்பது சிக்காடாக்களின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிக்காடாக்கள் உணவு சங்கிலியில் முக்கிய இடத்தில் இருப்பதால் இதற்கு ஏற்படும் ஆபத்து ஒட்டுமொத்தமாகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications