"லாகூரில் இருந்து உடனே வெளியேறுங்கள்.." அமெரிக்கா திடீர் எச்சரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி தருகிறோம் என பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்திருந்தது. மேலும், லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பையும் செயலிழக்கச் செய்யும் வகையில் இந்தியா பதிலடி கொடுத்திருந்தது. இதற்கிடையே லாகூரில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதலே இதற்குத் தொடக்கப் புள்ளியாகும். அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என மொத்தம் 9 இடங்களில் இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா பதிலடி
இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான், நேற்றிரவு 15 இந்தியப் பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இதற்கு லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பையும் செயலிழக்கச் செய்யும் வகையில் இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.
அமெரிக்கா அறிவுறுத்தல்
இதற்கிடையே லாகூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அங்குள்ள பாகிஸ்தான் நாட்டினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வெளியேற முடியாத அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் வெடிப்புகள், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் வான்வெளி ஊடுருவல்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்த அறிவுறுத்தலை வெளியிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தனது குடிமக்கள் உடனடியாக லாகூரிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ரெடியாக இருங்கள்
அமெரிக்க அரசின் உதவியை நம்பியிருக்காமல் வெளியேறும் திட்டங்களை வைத்திருக்கவும் புதிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய பயண ஆவணங்களை எடுத்துச் செல்லவும் அமெரிக்கா தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், என்ன நடக்கிறது என்பதை உள்ளூர் ஊடகங்கள் மூலம் கண்காணிக்கவும், முறையான அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனே வெளியேறுங்கள்
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "லாகூரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் அனைத்துத் தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்க உத்தரவிட்டுள்ளது.. மேலும், லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் மக்களை உள்ளூர் அதிகாரிகள் வெளியேற்றக்கூடும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மோதல் நிறைந்த பகுதியில் உள்ள அமெரிக்க மக்கள் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் மூலம் தேவையான தகவல்கள் பகிரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஆபரேஷன் சிந்தூரில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்தது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவின் உட்கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அதற்குத் தக்கப் பதிலடி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications