'கவலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்..' இந்தியாவுக்கு கூடுதல் நிதி.. நன்றி மறக்காமல் உதவும் அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்குக் கூடுதலாக 41 மில்லியன் டாலர் உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவியது
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மூன்று லட்சத்தைக் கூட தாண்டியது. அதேபோல உயிரிழப்புகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

கொரோனா 2ஆம் அலை
நாட்டில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலைக்குச் செல்ல உருமாறிய டெல்டா வகை கொரோனா முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஒரு புறம் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டது, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை சரியான நேரத்தில் படுக்கைகள் கிடைக்காமல் போனது உள்ளிட்டவை காரணமாகவும் பலர் உயிரிழந்தனர்.

41 மில்லியன் டாலர்
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு உதவும் வகையிலும், வரும் காலத்தில் ஏற்படும் அடுத்த கொரோனா அலையை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க உதவும் வகையிலும் கூடுதலாக 41 மில்லியன் டாலர் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மொத்தம் 200 மில்லியன் டாலர்
இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கவுள்ள மொத்த உதவி 200 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நாட்டிற்கு உதவி தேவைப்பட்ட போது இந்தியா உதவி செய்தது. இப்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்த நிதியைக் கொண்டு இந்தியாவில் கொரோனா பரிசோதனை, நோயாளிகளுக்கு மனநல சேவைகள், கிராம் புறப் பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் நிதியுதவி மூலம், இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தடுப்பூசி பணிகளிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications