இந்தியர்களை முடக்க சதி.. இனவெறி அமெரிக்கர்கள் சேர்ந்து போட்ட பகீர் திட்டம்! பல ஆயிரம் பேர் பாதிப்பு
சென்னை: டிரம்ப் அரசு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட எல்லா வெளிநாட்டினருக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அப்படித் தான் கடந்த வாரம் ஹெச்-1பி விசா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே பதற்றத்தில் இருந்த இந்தியர்களைக் குறிவைத்து இனவெறி பிரச்சாரமும் இந்தியர்கள் அமெரிக்கா செல்வதைத் தடுக்கும் முயற்சியும் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை $100,000 டாலராக உயர்த்தினார். முதலில் இந்த கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்பது போலத் தகவல் பரவியது. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள், குறிப்பாக விடுமுறைக்கு இந்தியா வந்தவர்கள் அச்சமடைந்தனர். அதன் பிறகே இது ஒரு முறை கட்டணம் என்றும் புதிதாக விண்ணப்பிப்போருக்கு மட்டுமே பொருந்தும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

பெரிய குழப்பம்
இருப்பினும், விளக்கம் வருவதற்கு முன்பு பலரும் அமெரிக்காவுக்குச் செல்ல வேகம் காட்டினர். கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க அதற்குள் அமெரிக்காவுக்குச் சென்றுவிடப் பார்த்தார்கள். டிரம்ப் விளக்கம் வந்த பிறகும் கூட பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்குத் திரும்பும்படி கேட்டுக் கொண்டன. பெரிய குழப்பம் இருப்பதால் சில நாட்களில் அமெரிக்காவுக்குத் திரும்பும்படி வலியுறுத்தின.
இனவெறி திட்டம்
அப்போது தான் இந்தியர்கள் மீது இனவெறி சைபர் தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது அமெரிக்காவில் இருக்கும் '4சான்' உள்ளிட்ட தீவிர வலதுசாரி குழுக்கள் விமான டிக்கெட்களை இந்தியர்கள் புக் செய்வதைத் தடுக்க ஒரு சதித்திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். இந்தியா- அமெரிக்கா இடையே இருக்கும் முக்கிய ரூட்களில் இவர்கள் டிக்கெட்களை பிளாக் செய்துள்ளனர். இதனால் இந்தியர்களால் டிக்கெட் புக் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எப்படி செய்வார்கள்
அதாவது பிரபலமாக இருக்கும் ரூட்களில் விமான டிக்கெட் புக் செய்வது போல இந்தக் கும்பல் செய்யும். ஆனால், கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள். இதுபோல கட்டணம் செலுத்தும் பேஜ் வரை போனால் குறிப்பிட்ட சீட் அல்லது டிக்கெட் தற்காலிகமாகச் சில நிமிடங்கள் வரை லாக் ஆகும். இப்படி ஒரே நேரத்தில் பல நூறு பேர் செய்வார்களாம். இதனால் உண்மையாகவே டிக்கெட் தேவைப்படுவோரால் ஈஸியாக டிக்கெட் புக் செய்ய முடியாது.
குறிப்பிட்ட நிமிடங்கள் முடிந்த பிறகு, அந்த டிக்கெட்கள் அன்-லாக் ஆகும். அப்போது மீண்டும் இதைச் செயல்முறையைச் செய்து லாக் செய்வார்களாம். இதுபோல தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருந்துள்ளனர்.
எகிறிய டிக்கெட் விலை
இந்தக் காலத்தில் விமான டிக்கெட் விலை எல்லாம் கணினி மூலமாகவே நிர்ணயம் செய்யப்படும் எனவே, இதுபோல ஒரே நேரத்தில் பலரும் டிக்கெட் புக் செய்ய வரும்போது தேவை அதிகமாக இருப்பதாகக் கணினி நினைத்துக் கொள்ளும். இதனால் டிக்கெட் விலை உயர ஆரம்பிக்கும். பல நூறு இனவெறி அமெரிக்கர்கள் இதுபோல புக் செய்ய ஆரம்பித்ததால் டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நியூயார்க், டல்லாஸ் என இந்தியர்கள் அதிகம் இருக்கும் நகரங்களுக்கான விமானச் சேவையைக் குறிவைத்து இதைச் செய்துள்ளனர்.
வேற வழியே இல்லை
மேலும், இதை அவர்களோ ஏதோ ரகசியமாக எல்லாம் செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் ஓபனாகவே இது பற்றிப் பேசி, திட்டமிட்டே செய்துள்ளனர். இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி திட்டத்திற்கு "clog the toilet" என்று பெயரிட்டுள்ளார்கள். அதாவது கழிவறையை முடக்குங்கள் என்று சதி திட்டத்தின் மூலம் இந்தியர்களைக் காலி செய்யப் பார்த்துள்ளனர். இதனால் பல இந்தியர்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் விலைக்கு டிக்கெட் புக் செய்து, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications