"கல்வி துறையை நீக்க போகிறேன்.." தடாலடியாக அறிவித்த டிரம்ப்! அமெரிக்க மக்களுக்கு ஷாக்! என்னாச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப் அந்நாட்டின் பெடரல், அதாவது மத்திய அரசில் உள்ள கல்வித் துறையை அகற்றப் போவதாகத் தடாலடியாக அறிவித்துள்ளார். அவர் ஏதற்காக இதுபோல அறிவித்துள்ளார். இதனால் என்ன மாற்றம் நடக்கப் போகிறது. உண்மையில் கல்வித் துறையை இப்படி ஒரு அதிபர் நினைத்தால் அகற்ற முடியுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் தனது கேபினட்டில் இடம்பெறப் போகும் அமைச்சர்களைத் தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே நேற்று அவர் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது பெடரல் அரசில் உள்ள கல்வித் துறையை அகற்றப் போகிறாராம்.. எது கல்வித் துறையை நீக்குகிறாரா எனப் பதற வேண்டாம்.. பெடரல் அரசின் வசம் இருக்கும் கல்வித் துறையை மாகாண அரசுகளின் அதிகாரத்திற்கே முழுமையாக விட போகிறாராம். ஏன் இப்படிச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்: மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒரு மாணவருக்கு அதிக செலவு செய்தாலும், கல்வி முறை மோசமாக உள்ளது என்பதே டிரம்பின் வாதம்.. அமெரிக்க மாகாணங்களுக்குக் கல்வியில் முழு கட்டுப்பாட்டைக் கொடுத்தால் குறைந்த செலவில் அதைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதும் இதற்கு பெடரல் அரசின் மேற்பார்வை தேவையில்லை என்பதுமே டிரம்பின் நிலைப்பாடு.
டிரம்பின் இந்த முடிவு நிதி சார்ந்து மட்டும் இல்லை.. கல்வி என்பது மாகாண அளவில் இருந்தால் மட்டுமே அங்கு உள்ளூரில் என்ன தேவையோ அதற்கேற்ப கல்வி முறையை வடிவமைக்க முடியும் என்பதும் டிரம்பின் நிலைப்பாடு. மேலும், அமெரிக்க அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் கல்வி என்பது பெடரல் அரசின் பொறுப்பு என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் டிரம்ப் தரப்பு சுட்டுக்காட்டுகிறது. மேலும், குடியரசு கட்சியினர் பொதுவாகவே சிறிய அரசையே விரும்புவார்கள். இவை தான் கல்வியை மாகாணத்தின் உரிமையாக மாற்றுவேன் என டிரம்ப் சொல்லக் காரணமாகும்.
வரலாறு: கடந்த 1979ம் ஆண்டில் ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்டர் என்பவர் அதிபராக இருந்த போது அங்குள்ள பெடரல் அரசில் கல்வி துறை உருவாக்கப்பட்டது. கல்வித் துறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் தான் கல்வித் துறை உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போதே அதைப் பலரும் எதிர்த்தனர். பெடரல் அரசு தனது அதிகாரத்தைத் தேவையில்லாமல் அதிகரிக்க முயல்வதாகப் பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
நன்மை தீமை: சரி, டிரம்ப் இப்போது கல்வித் துறையை மூடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் நன்மை தீமை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். முதலில் இது மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கும். மாகாண அளவில் உள்ளூர் சூழலைப் பொறுத்து அவர்களால் பாடங்களை உருவாக்க முடியும். அதேபோல அமெரிக்கா போன்ற பெரிய நாட்டிற்கு ஒரே கல்வி முறை என்பது செட் ஆகாது என்றும் பலரும் குறிப்பிடுகிறார்கள். மேலும், பெடரல் அரசின் செலவுகள் கணிசமாகக் குறையும்.
இதனால் தீமை என்றால் முதலில் பெடரல் அரசின் நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு அது கிடைக்காமல் போகும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்போர் இந்த நிதியுதவியையே பெரியளவில் நம்பி இருக்கும் நிலையில், அது திடீரென கிடைக்காமல் போனால் பெரிய நஷ்டம் தான். அதேபோல பணக்கார மாகாணங்களால் கல்விக்கு அதிகம் செலவழிக்க முடியும். அதேநேரம் ஏழை மாகாணங்களால் செலவழிக்க முடியாது. இதனால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.
நீக்க முடியுமா: என்ன தான் டிரம்ப் கல்வித் துறையை நீக்கப் போகிறேன் எனச் சொன்னாலும், அமெரிக்க சட்டப்படி கல்வித் துறையை நீக்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை.. அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் எல்லாம் தேவைப்படும். 1979ல் கேபினட் துறையாகவே கல்வித்துறை உருவாக்கப்பட்டது. எனவே, அதை அகற்ற வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் இப்போது குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தாலும் கூட அதற்குத் தேவையான ஆதரவு கிடைப்பது சிரமம்.
இதனால், டிரம்ப் வேறு வழிகளைப் பயன்படுத்தலாம்.. அதாவது அதிபர் என்ற முறையில் தனது உத்தரவுகள் மூலம் கல்வித்துறையின் நிதியைக் குறைக்கலாம். இதுபோல செய்வதன் மூலம் கல்வித்துறை அதிகாரத்தைக் குறைக்கலாம்.. ஆனால், இதன் மூலம் அவரால் கல்வித்துறையை மொத்தமாக நீக்க முடியாது. மேலும், சட்ட ரீதியாகவும் இதற்குச் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications